நிறுவும் வேலைகளுக்கு நிறைய நேரம் ஆகிறதா ?



ஒரு கட்டுமானத்தை உருவாக்குவதற்குத் தேவைப்படும் ஒவ்வொரு பகுதியையும் தயார் நிலையில் செய்து எடுத்துக் கொண்டு வந்திருப்பீர்கள். எல்லாவற்றையும் கோர்த்து இணைக்க வேண்டியதுதான் பாக்கி.ஆனால், பெரும்பாலான வேலைகளில் இது எளிதாக முடிந்துவிடும் என்று நினைத்துக் கொண்டு ஆரம்பிப்பீர்கள். அது இழுத்துக் கொண்டே போய்க் கொண்டிருக்கும்.  அவ்வாறு இடையூறுகள், இழுத்தடித்தல்கள் இல்லாமல் வேலைகளை விரைவாக முடிக்க வேண்டுமா? சில உத்திகளைப் பின்பற்ற முயற்சியுங்கள்.

குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கை மற்றும் அளவுகளில் தேவைப்படும் பாகங்கள் கொண்டு வந்து இறக்கப்பட வேண்டும். ஒப்பந்தக்காரர்கள் இதைச் சரியாகச் செய்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். கட்டுமானப் பொருட்களைக் கையாளும் விதமும் முக்கியமானது. முற்றிலும் மனித உழைப்பை நம்பியே இயங்க வேண்டி இருப்பதைக் குறைக்க வேண்டும். அது அதற்கு உள்ள இயந்திரங்களைப் பயன்படுத்த முன் வர வேண்டும்.

தனித் தனி பாகங்களைச் சரியான வரிசையில் இணைத்துப் பொருத்தும் வேலையை வரிசைப்படி செய்து முடித்து வைத்துக் கொள்ள வேண்டும். எப்போது, எந்த இடத்திற்கு எத்தனை எண்ணிக்கையில் பாகங்கள் வந்து சேர வேண்டும் என்பதைத் திட்டமிடுவதே இந்த வேலைகளின் தொந்தரவுகளைக் குறைக்கும் முக்கியப் பகுதியாகும். கொண்டு வந்த பொருட்களை எங்கே இருப்பு வைப்பது என்று திண்டாடும் நிலை ஏற்பட்டுவிடாமல் எல்லா வற்றையும் கச்சிதமாகப் பார்த்துச் செய்ய வேண்டும். ஒப்பந்தக்காரர்கள் சொன்னபடி கொண்டு வந்து இறக்கி வைத்துவிடுவார்கள்.

இறக்கி வைப்பதற்கான வசதிகள் போதுமான அளவில் இல்லை என்றாலும் திருட்டு, கொள்ளை, கவனக்குறைவு, முறைகேடான கையாள்தல், பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் இழப்பு ஏற்படும். 
 
சாரம் கட்டுதல், உயர்த்து வதற்கான மேடை அமைத்தல் போன்ற வேலைகள் எல்லாம் தற்காலிகமானவைதான். வேலை முடிந்ததும் பிரித்து எடுத்துவிடப் போகிறோம், இதற்குப் போய் ஏன் அதிகம் மெனக்கெட வேண்டும் என்கிற மெத்தனம் கூடவே கூடாது.
ஏனென்றால் இம்மாதிரியான ஏற்பாடுகள் பாதுகாப்பில்லாதவையாக இருக்கும். சேதங்கள் ஏற்பட வழி வகுத்துவிடும். எனவே கவனமாகச் செய்ய வேண்டியது அவசியம்.பாகங்களை எந்த வரிசைப்படி அடுக்க வேண்டும், எந்த வரிசைப்படி எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதே பெரிய கலை. இதை உரிய விதத்தில் செய்பவர்கள் வேலைகளை எளிதாகவும் வேகமாகவும் முடித்துவிடுவார்கள்.
    வரிசைக்கிரமத்தை மாற்றுகிறவர்கள் சிண்டைப் பிய்த்துக் கொள்வார்கள்.  வேலைகளிலும் தேவையற்ற தாமதம் திணிக்கப்படும். சின்னச் சின்ன விசயங்களில் அலட்சியம் காட்டாமல் இருப்பது  பெரிய ஆதாயத்தைக் கொடுக்கும்.சரியான ஒருங்கிணைப்பு இருந்தால் நிறுவும் வேலைகளுக்கு ஏன் நிறைய நேரம் ஆகப் போகிறது?

உலர் காரை தயாரிக்க உருப்படியான இயந்திரம் !



காரை என்றால் தயாரிப்பு மற்றும் பயன்படுத்தும் நேரங்களில் ஈரமாகத்தானே இருக்கும் என்கிற சந்தேகம் பலருக்கும் ஏற்படும். பயன்படுத்தப்பட்ட பிறகுதானே காரை உலர வேண்டும் என்றும்  எண்ணுவார்கள். அது என்ன உலர் காரை?உலர் காரை என்பது ஒரு புதிய தொழிற்நுட்பம்.  காரைக்கான தேவை அதிக அளவு இருக்கும்போது இந்தத் தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். இதனால் உற்பத்தித் திறன் உயரும். வேலைகளை விரைந்து முடிக்கலாம்.

தரம் எப்படி?

உலர் காரையைப் பயன்படுத்துவது கட்டுமானத்தின் தரத்தைப் பாதிக்குமா? அது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. உலர் காரையின் தரம் என்பது கலவை விகிதத்தைப் பொறுத்தது. கலவை எந்த அளவுக்குச் சீராக உருவாக்கப்படுகிறது என்பதை வைத்தும் தரத்தை முடிவு செய்யலாம். எனவே, தரமான உலர் காரையைத் தயாரிப்பதில் கவனமாகச் செயல்பட வேண்டும்.

காரையின் தேவைகாரையை எந்தெந்த வேலைகளுக்குப் பயன்படுத்துகிறோம்? செங்கல் கட்டுமான வேலைகளுக்கு இது அவசியம் தேவைப்படும். இணைப்புகளை வலுவுள்ளவையாக ஆக்குவதற்கும் காரை வேண்டி இருக்கும். ஓடுகளை  அதனதன் இடத்தில் ஒட்டிப் பதிப்பதற்கும் காரை முக்கியம். மெல்லிய இடு தளத்தை உருவாக்கவும் காரையைப் பயன்படுத்த வேண்டும். இப்படிப் பார்க்கும்போது ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு விதத்தில் காரையைத் தயாரிக்க வேண்டி இருக்கிறது. காரைத் தயாரிப்பு முறைகளும் வேறுபடுகின்றன.

இந்த வேலைகளை எல்லாம் பொதுவாக ஒரே இயந்திரத்தில் செய்ய முடிந்தால்? இந்தச் சிந்தனையின் விளைவாக, நார்வேயைச் சேர்ந்த ஃபோர்பெர்க் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டதுதான் டாஷ்வால் இரட்டைஷாஃப்ட் உலர் காரைக் கலவை இயந்திரம்.

நன்மைகள் என்ன?

கலவையின் தரம் மிக உயர்ந்ததாக இருக்கும். எதிர்பார்க்கும் தரத்திலான கலவையை எளிதில் உருவாக்கிவிடலாம். கலவையைத் தயாரிப்பதற்குத் தேவைப்படும் நேரத்தைக் கணிசமாகக் குறைக்கலாம்.  உற்பத்தி ஆலையின் செயல் திறனை மேம்படுத்தலாம். பராமரிப்புத் தேவைகள் குறைந்த அளவுக்கே இருக்கும்.
கலக்கும் வேலையைச் செய்யும் இயந்திரப் பகுதிகளில் உராய்வு, சிக்கல் என எதுவும் ஏற்படாதவகையில் கலக்க வேண்டிய பொருட்கள் உள்ளுக்குள் இடப்பட வசதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் இயந்திரத்தின் தேய்மானம் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும். இது இயந்திரம் நீண்ட காலம் உழைப்பதற்கு வழி வகுக்கும்.

கலவைகளைத் தயாரிக்க எவ்வளவு நேரம் ஆகும் என்று நீங்கள் ஒரு கணிப்பை வைத்திருப்பீர்கள். ஆனால் இந்த இயந்திரத்தின் மூலம் 3 விநாடிகள் முதல் 3 நிமிடங்களுக்குள் கலவை வேலைகளை முடித்துவிடலாம் என்று சொன்னால் நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கும். கலக்கும் வேலைகள் சீராகவும் ஆரவாரத்திற்கு இடமில்லாமலும் அமைதியாக நடக்கும். மிகக் குறைந்த பராமரிப்பே போதும். மின்சாரமும் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படும். கட்டுமானத் தொழிலின் சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில் இந்த இயந்திரங்கள் வடிவமைக்கப்படுகின்றன. சொந்த உபயோகத்திற்கு மட்டுமின்றி, வியாபார ரீதியாகவும் இதை பயன்படுத்த முடியும்.

நீர்கசிவு விரிசல்களை தடுக்கும் பெனிட்ரான்அட்மிக்ஸ் ! (PENETRON ADMIX)


கட்டுமான வேலைகள் நடைபெறும் நேரத்திலேயே நீர்க்கசிவையும் வெடிப்புகளையும் தடுக்கவல்ல சேர்மானப் பொருளாக உலகெங்கும் புகழ் பெற்றிருக்கிறது பெனிட்ரான்அட்மிக்ஸ்(Penetron Admix)எனப்படும் கலவை. இது அண்மைக்கால அதிநவீனக் கண்டுபிடிப்பு. கான்கிரீட்டுக்குள் தண்ணீர் புகாமல் தடுக்கும் வேலையைத் திறம்படச் செய்வதில் ஈடு இணையற்றது.

பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையை கான்கிரீட்டைத் தயாரிக்கும் இடத்திலேயே, தயாரிப்பு வேலைகள்  நடக்கும் போதே கலக்கலாம். ஆலைகளில் தயாரித்து எடுத்து வரப்படும் கான்கிரீட் எனில் அந்த ஆலைகளிலேயே கலந்து கொள்ளலாம். கட்டட வேலைகள் நடைபெறும் இடத்திலேயே கான்கிரீட் தயாரிக்கப்படுவதாக இருந்தால் அதே இடத்திலேயும் கலக்கலாம்.
பெனிட்ரான் அட்மிக்ஸ் சேர்மானத்தைக் கான்கிரீட்டுடன் எவ்வளவு அளவுக்குக் கலப்பது? கான்கிரீட்டில் இடம் பெற்றிருக்கும் சிமெண்ட் தன்மை கொண்ட பொருட்களின் எடையில் நூற்றுக்கு   0.8 என்ற விகிதத்தில் கலந்தால் போதும். இந்த முறையைப் பயன்படுத்துவது மிக மிகச் சிக்கனமானதாக இருக்கும். தண்ணீர்க் கசிவுத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மீண்டும் தனி வேலைகளைச் செய்ய வேண்டிய தேவை ஏற்படாது. ஏற்கனவே இடப்பட்டுள்ள கான்கிரீட்டா? அதனால் பரவாயில்லை. அதன் மீதும் பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையைப் பயன்படுத்தலாம். ஆலைகளில் முன்னதாகவே தயாரித்து வைத்துக் கொண்டு தேவைப்படும் இடத்தில், நேரத்தில் பயன்படுத்தப்படும் ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவைகளிலும் இதைச் சேர்க்கலாம்.

நிரூபணம் தேவையா?

பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையின் பலன்களைக் சோதித்துப் பார்ப்பதற்காக அமெரிக்காவின் அயோவா மாநிலத்தில்  ஒரு கட்டுமானத்தில் சில சோதனைகளை மேற்கொண்டார்கள். ஒரு பெரிய தண்ணீர்த் தொட்டி கட்டும் வேலை. அதில் இந்தக் கலவையைப் பயன்படுத்தினார்கள். ஆரம்பத்தில் பெரிய வேறுபாடு எதுவும் தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஆங்காங்கே தண்ணீர் கசிந்து வெளியேறுவதைப் பார்க்க முடிந்தது.ஒன்றிரண்டு நாட்களுக்குப் பின் இந்தக் கசிவின் வேகம் குறைந்தது. சொட்டுச் சொட்டாக மட்டுமே நீர் வெளியேறியது. தொட்டியில் இருந்த நீர் ஆவியாகி வெளியேறும் இடங்களில்
மட்டும் ஈரம் தென்பட்டது. இது தொட்டியின் விளிம்பிலிருந்து 7 முதல் 10 செ.மீ ஆழம் வரை காணப்பட்டது.

இந்த நேரத்திற்குப் பிறகு, படிகங்கள் உருவாகி வருவதை வெறும் கண்களாலேயே பார்க்க முடிந்தது. வெடிப்புகளை இந்தப் படிவங்கள் அடைத்துக் கொள்வதைக் கண்ணால் காண முடிந்தது. முழுமையாக ஏழு நாட்கள் கழிந்த பிறகு எந்தவொரு வெடிப்பும் படிகங்களால் அடைக்கப்படாமல் இல்லை என்பதை உணர்ந்தார்கள். படிகங்கள் தாமே வளர்ந்து வெடிப்புகளை அடைத்துக் கொள்கின்றன என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணம் ஆயிற்று.

கடலுக்குள்ளும் வேலை செய்ய ஏற்ற பெனிட்ரான் அட்மிக்ஸ்

கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள கட்டுமானங்களைப் பராமரிக்கவும் பழுதுபார்க்கவும் எழும் தேவைகள் பலவிதமானவை. துறைமுகங்கள், கப்பல் கட்டும் தளங்கள், ஆழ் கடல் துரப்பண மேடைகள் போன்ற இடங்களில் உள்ள கட்டுமானங்களின் பெரும் பகுதி எப்போதும் கடல் தண்ணீருக்குள்தான் மூழ்கிக் கிடக்கும்.கடல் தண்ணீரில் உள்ள குளோரைட் கான்கிரீட்டுக்குள் புக நேர்ந்தால் கம்பிகளை அரித்து விடும். கம்பிகள் விரைவில் இற்றுப் போய் விழுந்துவிடும்.இது போன்ற தொல்லைகளைத் தடுக்க வேண்டுமானால் பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையைப் பயன்படுத்துவது சிறந்த பாதுகாப்பு ஏற்பாடாக அமையும்.

அந்தரத்தில் ஆடும் வீடு !




தரையில் போதுமான அஸ்திவாரம் இருந்தாலே ஆட்டம் காணும் கட்டிடங்கள் நம் நாட்டில் அதிகம். ஆனால், கட்டிடத்தில் 60 சதவீதம் அந்தரத்தில் அமைக்கப்பட்டும் ஆடாமல் இருக்கிறது. இது நார்வே ஆர்க்கிடெக்ட் வின்னி மாஸ் என்பவரின் கைத்திறம்.

    வின்னி மாஸுக்கு சொந்தமான பண்ணை நிலம் ஒன்று இருக்கிறது. அங்கு தனது ஓய்வு வீட்டை வடிவமைக்க நினைத்த போது இடம் போதவில்லை. ஏனெனில், அவரது நிலத்தில் சுமார் 20 அடி அளவிலான பெரிய சரிவு ஒன்று இருந்தது. முதலில் அந்த சரிவினை நிரப்பி மேல்மட்டத்துடன் சமப்படுத்துவதற்கு முயற்சித்தார். ஆனால், அவரது ஆர்க்கிடெக்ட் மூளை விழித்துக் கொண்டு பாதி நிலத்திலும், பாதி அந்தரத்திலும் ஏன் வீட்டை அமைக்கக்கூடாது? என கேள்வி கேட்கவே படத்திலுள்ள வீட்டை வடிவமைத்து கட்டியும் முடித்துவிட்டார்.
50 அடி நீளமும், 20 அடி அகலமும் உடைய இந்த வீடடில் 20 அடி நீளப்பகுதி உயர்மட்டத்தில் பதிக்கப்பட்டிருக்கிறது. மீதம் உள்ள 30 அடி நீளப்பகுதி யாதொரு தாங்கு தூண்களும் இன்றி  அந்தரத்திலேயே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது ஆபத்தில்லையா என ஆர்க்கிடெக்ட் வின்னி மாஸிடம் கேட்டபோது, “பொதுவாக இதுபோன்ற கட்டுமானங்களில் மூன்றில் இரண்டு பங்கு நிச்சயமாக நிலத்தில் ஊன்றியிருக்க வேண்டும் என்பது விதி. அதை இங்கு நான் தைரியமாக மீறியிருக்கிறேன். ஆனால், எவ்வித ஆபத்தும் இதற்கில்லை. ஏனெனில் அந்தரப் பகுதியில் இருக்கும் வீட்டிற்கான கவுன்டர் வெயிட்டை 6 கான்கிரீட் பில்லர்கள் கொண்டு நிலப்பகுதியில் ஏற்றியிருக்கிறேன்” என்கிறார் வின்னி மாஸ். கடல் அரிப்பிற்குப் பிறகு கடலோரம் கட்டப்பட்ட வீடுகள் இந்தியாவில் பெரும்பாலும் அந்தரத்தில்தான் ஆடும் என்பது வேறு விஷயம்.

ரூ.6 லட்சத்தில் இரண்டு அடுக்கு வீடு !


அஸ்திவாரம் போடுவதற்கே இரண்டு, மூன்று லட்சம் செலவாகும் இந்த காலத்தில்  வெறும் ரூ.6 லட்சத்தில் ஒரு வீட்டையே கட்டியிருக்கிறார்கள் சென்னை ஐஐடி பொறியியல் துறையினர். அதுவும் வெறும் குடிசை வீடு அல்ல. கிட்டத்தட்ட 2000 ச.அடி பரப்புடைய இரண்டடுக்கு மாடி வீடு கட்டுவதற்கு ரூ.6 லட்சம்தான் செலவாகிறதாம். அதெப்படி? சிமெண்டும், கம்பியும், செங்கல்லும், ஆட்கள் கூலியும் விண்ணைத் தொடும் இந்த காலக்கட்டத்தில் இது சாத்தியமா? என நீங்கள் ஆச்சரியப்படலாம்.
இது முழுக்க முழுக்க வழக்கமான மூலப்பொருட்கள் அல்லாத வித்தியாசமான மூலப்பொருட்களைக் கொண்டு
கட்டப்பட்டிருக்கும் கட்டிடமாகும்.

“உரத் தொழிற்சாலைகளின் கழிவு பொருட்கள், கண்ணாடி இழைகள் மற்றும் ஜிப்சம் உப்பு ஆகியவற்றின் கூட்டுச் சேர்க்கையில் தயாரிக்கப்பட்ட (கிளாஸ் ஃபைபர் ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம்) ஜிஎஃப்ஆர்ஜி பலகைகள், இவற்றோடு குறைந்த அளவு சிமெண்ட் மற்றும் மிகக் குறைந்த அளவு இரும்புக் கம்பிகள் இவற்றை வைத்துதான் இந்த வீட்டை அமைத்திருக்கிறோம்.

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 1981 சதுர அடி அளவில் இரண்டு அடுக்குகள் கொண்ட இந்த மாதிரி வீட்டைக் கட்ட தேவைப்பட்ட கால அவகாசம் வெறும் ஒரு மாதம்தான். சொந்த வீடு என்பது கனவாகவே போய்விடுமா? என்ற ஏக்கத்தில் இருக்கும் நடுத்தர குடும்பங்களுக்கு இந்த புதிய தொழிற்நுட்பம் நிச்சயம் பயன்படும்” என்கிறார் டாக்டர் தேவதாஸ் மேனன்.
பொதுத்துறை உரத் தொழிற்சாலைகளான எஃப்.ஆர்.பி.எல்., கொச்சின், ஆர்.சி.எஃப்., மும்பை ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம்  போர் டுகளை  தயாரிக்கின்றன. எதிர்காலத்தில் தனியார் தொழிற்சாலைகளும் கிளாஸ் ஃபைபர் ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம் போர்டுகள் தயாரிப்பில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேனல்களின் விலை ஒரு சதுர மீட்டர் ரூ.750 முதல் ரூ.900 வரை விற்கப்படுகிறது. ஜி.எஃப்.ஆர்.ஜி., (GFRG) கொண்டு கட்டப்படும் வீடுகள் நிலநடுக்கத்தால் பாதிக்காத வகையிலும், பூமியின் ஈர்ப்பாற்றலை தாங்கும் வகையிலும் இருக்கும்.
ஆஸ்திரேலியா, சீனா, ஓமன் போன்ற நாடுகளில் கிளாஸ் ஃபைபர் ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம் போர்டுகளை பயன்படுத்தி நிறைய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ரிமோட் கன்ட்ரோல் ரோலிங் ஷட்டர்கள் !




ரிமோட் கன்ட்ரோலுடன் கூடிய ரோலிங் ஷட்டர்களை மெட்டல் கிராஃப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
உலோகத்தினால் ஆன பலவகை கேட்கள், கிரில்கள், ஃபர்னிச்சர்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகத் திகழும் மெட்டல் கிராஃப்ட் Metalcraft) பிரத்யேக டிசைன்களில் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கக்கூடிய ரோலிங் க்ஷட்டர்களை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. நூறு சதவீத பாதுகாப்பு மிக்க இந்த க்ஷட்டர்களை வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தலாம். இவை இரண்டு ஆண்டு உத்திரவாதத்துடன் கிடைக்கும்.

பாலிகார்பனேட் (Polycarbonate)), கல்வனைஸ்ட் அயர்ன் (Galvanized Iron), அலுமினியம் (Aluminium) ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட இந்த ஷட்டர்கள், தரத்திலும், பாதுகாப்பிலும் சர்வதேச தரம் கொண்டவை ஆகும். ‘இன்ஃப்ரா ரெட் போட்டோ எலெக்ட்ரிக் டிடெக்டர்’ (Infra Red Photo Electric Detrctor) சாதனத்துடன் கூடிய ரிமோட் கன்ட்ரோல், அதிகபட்சமாக 60 மீட்டர் தூரத்திலிருந்து க்ஷட்டர்களை இயக்க உதவுகிறது.2 மீட்டர் முதல் 6 மீட்டர் உயரம் வரை உள்ள க்ஷட்டர்கள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையிலான விலைகளில் கிடைக்கின்றன.
க்ஷட்டர்களில் இடம் பெற்றிருக்கும் ‘டி’ வடிவிலான நைலோஃபெல்ட் ((Nylofelt) அல்லது நைலான் கிளிப்கள் (Nylon Clips), லூப்ரிகண்ட்ஸ் (Lubricants)  மற்றும் கிரீஸ் இல்லாமல் எளிதாக க்ஷட்டர்கள் இயங்குவதை உறுதி செய்கின்றன. க்ஷட்டர் கதவுகளை, கையினாலோ, செயின் மூலமாகவோ அல்லது டி.சி. மோட்டார் உதவியாலோ சிறு சத்தம் கூட இல்லாமல், மிக வேகமாகஇயக்க முடியும். ஷட்டரின் உள்ளே மறைவாகப் பொருத்தப்பட்ட டிரைவ்  (Drive)  சாதனம், சத்தம் இல்லாமல் உதவுகிறது. மின்சாரம் இல்லாத நேரங்களில் கையினால் இயக்கும் முறைக்கு க்ஷட்டர் செயல்பாட்டை எளிதாக மாற்றிக் கொள்ளலாம். இந்த க்ஷட்டரில் தானாகவே குறிப்பிட்ட நேரத்தில் மூடிக்கொள்ளும் டைமர் (Timer)  வசதியும் உள்ளது. இதற்கு பேட்டரி பேக் அப் (Battery Back-up)  வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

உள்புறம், வெளிப்புறம், அடிப்பகுதி என 3 இடங்களில் பூட்டிக் கொள்ளும் வசதி கொண்ட மூன்றடுக்கு லாக் சிஸ்டம், பாதுகாப்புக்கு நூறு சதவீத உத்திரவாதம் அளிக்கவல்லது. வாடிக்கையாளர்களின் தேவைக்கும், விருப்பத்திற்கும் ஏற்ப, ஆக்சஸ் கன்ட்ரோல் சிஸ்டம் Access Control System), மேக்னட்டிக் சென்சார்(Magnetic Sensor) ஒலி எழுப்பக்கூடிய எச்சரிக்கை விளக்கு(Warning Light with Buzzer) ) போன்ற கூடுதல் கருவிகளையும் பொருத்திக் கொள்ளலாம்.

மனதை திருடும் 3D மேஜிக் !



மிகவும் பழமையான கலைதான் ஓவியம். அதிலும் அமெரிக்கா போன்ற மேல்நாடுகளில் தரைகளிலும், சுவர்களிலும் வரையப்படும் ரசனையான ஓவியங்களுக்கு வரவேற்பு அதிகம். நாளடைவில் முப்பரிமாண ஓவியங்களாக உருமாறியதுதான் பெரிய திருப்புமுனை. அங்கு உருவாகும் அனைத்து வித குடியிருப்புகள், வணிகவளாகங்கள், ஷாப்பிங் மால்கள் போன்ற கட்டிடங்களின் தரைகளில் திரும்பிய இடமெல்லாம் கலை உணர்வுமிக்க ஓவியங்களை வரைந்து தள்ளுகிறார்கள் உள்ளூர் ஓவியர்கள். குடியிருப்பு வாசிகளையும், வாடிக்கையாளர்களையும் மகிழ்விப்பதற்கு கட்டிட மற்றும் நிறுவனங்களின் சொந்தக்காரர்களே இது போன்ற ஓவியங்களை வரையச் செய்கிறார்கள்.

ஓவியங்கள் என்றால் எப்போதும் நாம் பார்த்து பழகிபோன இயற்கை கண்காட்சி, அழகியல் சார்ந்த ஓவியங்கள் அல்ல. திடீரென நீச்சல் குளத்திலிருந்து வெளியேறும் சுறா, நடைபயிலும் சிங்கம், ராட்சத பாம்பு, பாதாள சுரங்கம் போன்ற பலவகையான தோற்ற மாயைகளை ஏற்படுத்தும் முப்பரிமாண ஓவியங்களே வரையப்படுகிறது. சிறுவர்களை மட்டுமன்றி  பெரியவர்களையும் இது பெரிதளவு ஈர்க்கிறது.
இங்குள்ள படங்களை பாருங்கள்எது ஓவியம், எது அசல் என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு எத்தனை தத்ரூபமாக வரைந்திருக்கிறார்கள்.

   நமது நாட்டிலும் குடியிருப்பு புராஜெக்ட்டுகள் உருவாக்கப்படுகின்றன. சுற்றிலும் இடம்விட்டு நமது பில்டர்கள் கட்டுகிறார்கள். கார்டனிங், குழந்தைகள் பூங்கா, ஜாகிங் ட்ராக் என இதெல்லாம் தவறாது உருவாக்குகிறார்கள். கூடவே இது போன்ற ரசனையைத் தூண்டும் முப்பரிமாண ஓவியங்களை வரைந்து வைத்தால் அது வாடிக்கையாளரை பெருமளவு ஈர்க்கும் அல்லவா?

கலையழகு மிக்க கான்கிரிட் !


மரத்தில் செய்யக் கூடிய அத்தனை வேலைகளையும் கான்கிரீட்டில் செய்தால் எப்படி இருக்கும். இன்னும் அழகாக அமையும். நீண்ட காலம் உழைக்கும். கடினமாக இருக்கும். பூச்சி, ஈரம் போன்றவற்றால் பாதிக்கப்படாது. விலையும் குறைவாகவே இருக்கும்.
இதை எப்படி செய்யலாம்?

கான்கிரீட் பரப்பைப் பளபளப்பாக்கவேண்டும். அதற்கு முன் அந்தப் பரப்பின் மேல் ஸ்டென்சில் எனப்படும் அச்சுத்தாளைப் பரப்பிக் கொள்ள வேண்டும். இந்த அச்சுத் தாளில் நீங்கள் விரும்பும் வடிவத்தை இடம் பெறச் செய்யலாம்.
அச்சுத்தாளைக் கான்கிரீட் பரப்பில் ஒட்டிய பின் ஒரே நேரத்தில் செதுக்கி எடுக்கும் வேலையையும், பளபளப்பாக்கும் வேலையையும் மேற்கொள்ளலாம்.

இந்தத் தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு சிற்பத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்று கணக்குப் போடுகிறீர்களா? பளிங்கில் இதைப் போல் செதுக்கி எடுப்பதற்கு ரூ.7 ஆயிரம் ஆகிறது என்று வைத்துக் கொள்வோம். கான்கிரீட்டில் செதுக்கினால் ஒரே ஒரு ஆயிரம்தான் ஆகும். நம்ப முடியாத சிக்கனம்.
இந்த வேலைப்பாடுகளை அலங்காரத் தேவைகளுக்குப் பயன்படுத்தலாம். விளம்பரங்களை அமைத்துக் கொடுக்கலாம். நடைபாதைகள், குளியலறைத் தரை போன்ற இடங்களில் கால்கள் வழுக்குகின்றனவா?
இந்த முறையைப் பின்பற்றி செதுக்கு வேலைகளைச் செய்தால் உராய்வை அதிகரிக்கலாம். வழுக்கிவிடுவதைக் குறைக்கலாம்.
உறுதியான, உடைந்து போகாத கலை வேலைப்பாடுகள் சாத்தியமாகும்.ஒளித் தடுப்புத் தேவைகளுக்கு ஏற்றது.
கணினியையும் பயன்படுத்தி விதவிதமான அச்செழுத்துக்களையும் வேலைப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். எந்த மொழி எழுத்துக்கள் வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்கலாம். உளுத்துப் போகுமோ? கறையான் பிடிக்குமோ? வார்னீஷ் அடிக்க வேண்டுமோ? என்று கவலைப் படத்தேவையில்லை.

இயற்கையிலேயே பற்பல எழிலான தோற்றங்களை உருவாகுமாறு செய்யலாம். இயற்கை வண்ணங்களை உபயோகிக்கலாம்.
சிமெண்டின் நிறத்தை விரும்பியபடி தேர்வு செய்யலாம். சாம்பல் நிறம், வெள்ளை, கலவை நிறங்களில் சிமெண்ட் வகைகள் கிடைக்கின்றன. தேவைப்பட்டால் செயற்கைச் சாயங்களையும் பயன்படுத்தலாம். இதில் எண்ணற்ற வண்ணங்கள் இருக்கின்றன. தந்தத்தைப் போன்ற நிறம், வெள்ளை, மஞ்சள், பழுப்பு, சாம்பல், கறுப்பு, ஆலிவ் பச்சை, மரகதம், நீலம் என்று எத்தனையோ வண்ணங்கள் சாத்தியம்.ஜல்லிகளிலும் விதவிதமான வண்ணங்கள் இருக்கின்றன. சிவப்பு, பச்சை, கருப்பு முதலிய நிறங்களைத் தேர்ந்தெடுக்கலாம். பிறகென்ன? அசத்துங்கள்!