கலவையை ஊற்றும் போது கவனியுங்க !



கலவையைக் கலந்து , தேவைப்படும் இடத்தில், முறையாகக் கொட்டிப் பரப்புவதைக் கான்கிரீட்டை ஊற்றுதல் என்று சொல்லலாம்.கான்கிரீட் இடும் வேலை என்றும் குறிப்பிடலாம். இத்தகைய வேலைகளை மேற்கொள்வதற்கு முன்பாக, சோதிக்க வேண்டிய விசயங்கள் பல இருக்கின்றன. இந்தக் கடமைகளை முறைப்படி நிறைவேற்றினால்தான் கான்கிரீட்டை ஊற்றும் வேலை முழுமை பெறும்.

கான்கிரீட் இடப்படுவதற்கு முன், இடப்பட வேண்டிய பகுதியை முழுமையாக ஆராய வேண்டும். பலகை அடைக்கும் வேலைகள் எந்த அளவுக்குச் செம்மையாக நிறைவேற்றப்பட்டுள்ளன என்று பார்க்க வேண்டும்.பலகை அடைப்பின் அளவு, வடிவம் ஆகியவற்றைச் சோதிக்க வேண்டும். செய்யப்பட உள்ள வேலையின் தன்மைக்கு ஏற்ற வகையில் அமைத்திருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். கலவை வழிந்து வெளியே ஓடிவிடாமல் இருப்பதற்கும், ஒழுகி வீணாவதைத் தடுப்பதற்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றனவா என்று பார்ப்பது முக்கியம்.

முட்டுக்கள் முறையான விதத்தில் பாரத்தைத் தாங்கக் கூடியவையா? சரியான இடத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றனவா?  இணைப்புகள் உறுதியாக உள்ளனவா? என்று சோதிக்க வேண்டும்.கான்கிரீட் வந்து சேர்ந்துவிட்டதா? அவசரம் வேண்டாம். கான்கிரீட்டைச் சோதியுங்கள். அது தரமாகத் தயாரிக்கப்பட் டிருக்கிறதா? சோதனை முடிவுகள் திருப்திகரமாக இருந்தாலொழியக் கான்கிரீட் இடும் வேலைகளைத் துவக்க வேண்டாம்.

இதற்கு என்ன வழி? நீங்களே சோதித்துப் பார்க்க வேண்டியதுதான். ஜல்லிகளின் அளவை எப்போதாவது திடீரென்று சோதித்துப் பாருங்கள். கலவையில் சேர்க்கப்படும் சிமென்ட் தரமானது தானா? விரும்பிய கிரேடு கொண்டதா? தயாரிப்பு நிறுவனம் எப்படி?  சிமென்ட் எவ்வளவு வேகத்தில் இறுகுகிறது? உறுதி எப்படி? சோதித்துப் பார்க்க வேண்டும்.

கான்கிரீட்டில் கட்டிகள் இருக்கக் கூடாது. அப்போதுதான் பரவுவது சீராக இருக்கும். உயரமான இடங்களுக்குப் பம்ப் செய்வதாக இருந்தாலும் அந்த வேலை தடையில்லாமல் நடக்கும். கான்கிரீட்டுக்குள் எந்த அளவிற்குக் காற்று இடம் பெற்றிருக்கிறது என்பதையும் சோதிக்க வேண்டும். கலவையின் வெப்ப நிலை என்ன? எப்போது இறுகும்? எவ்வளவு நேரத்தில் உறுதி பெறும்? சன்னத் தன்மை எப்படி? வலு எப்படி? ஆராய வேண்டும்.கான்கிரீட் ஊற்றப்பட்ட பிறகும் உங்களுக்கு வேலை இருக்கத்தான் செய்கிறது.எங்கே கான்கிரீட்டை இட்டீர்களோ அந்த இடத்தைக் கவனமாகச் சோதியுங்கள். வெடிப்புகள் உருவாகி இருக்கின்றவா என்று விழிப்பாகப் பாருங்கள். எங்காவது சில சில்லுகள் பெயர்ந்து விழுந்திருக்கின்றனவா என்று ஆராயுங்கள். தேன்கூடு வடிவிலான குறைபாடுகளையும் கவனிக்கத் தவற வேண்டாம். ஒவ்வொன்றையும் கவனமாகச் சோதிக்க வேண்டும்.

ஒவ்வொரு பகுதியையும் உற்றுப் பார்த்து குறைகளைக் குறித்துக் கொள்ள வேண்டும். காற்று வெற்றிடங்கள் உருவாகி இருக்கலாம். கறைகள் படிந்திருக்கலாம். நிறம் மாறி இருக்கக் கூடும்.

இரும்பு கழிவில் கட்டுமான கற்கள் !


சில செங்கல்களை எடுத்துப் பார்க்கும் போது என்ன இது..இரும்பைப் போல் இருக்கிறதே என்று வியப்படையத் தோன்றும். கொஞ்சம் பொறுங்கள். இரும்புச் செங்கற்களே வரப் போகின்றன.  உண்மைதான்.இரும்பு உற்பத்தி ஆலைகளில் உருவாகும் கழிவுகளைப் பயன்படுத்திக் கற்களைத் தயாரிக்கலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இரும்பு ஆலைகளில் தூசி வடிவில் திரளும் குப்பைகளின் அளவு மலைப்பூட்டுவதாக இருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் இந்த வகைக் கழிவு ஆண்டொன்றுக்கு 7 இலட்சம் டன் என்ற அளவில் இருக்கிறது. அமெரிக்காவில் இது 1.2 கோடி டன் வரை இருக்கும் என்கிறார்கள். இவ்வளவு பெரிய அளவிலான கழிவை அப்படியே விட்டு வைத்துக் கொண்டிருந்தார்கள்.
இந்தக் கழிவை மூலப் பொருளாகக் கொண்டு கற்களைத் தயாரித்துக் கட்டுமானத் தேவைகளை நிறைவு செய்ய முடியும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இரும்பு உற்பத்தி ஆலைகளில் உருவாகும் கழிவுகளை வேல்ஜ் ஸ்லாக் (Waelz slag) என்று குறிப்பிடுவார்கள். சாதாரணமாக இது
பாறாங்கற்களைப் போல் காணப்படும். இதற்குப் பெரிய உபயோகம் எதுவும் இல்லை என்று போட்டு வைத்துவிடுவார்கள். எங்காவது பள்ளங்களை நிரப்ப வேண்டி இருந்தால் அங்கு இதைக் கொண்டு போய்க் கொட்டிவிடுவார்கள்.  இது விலைமதிக்க முடியாத நல்ல கட்டுமானப் பொருளாக மாற்றப் படலாம் என்று இப்போது கண்டு கொண்டிருக்கிறார்கள்.

வேல்ஜ் ஸ்லாக்கில் இரும்பு இருக்கிறது. சுண்ணாம்பு இடம் பெற்றிருக்கிறது. சிலிகான் ஆக்ஸைடும் உண்டு.  மாங்கனீஸ், காரீயம், துத்தநாகம் போன்ற உலோக ஆக்ஸைடுகளையும் காணலாம். இத்தனை நல்ல பொருட்களைக் கொண்டுள்ள இந்தக் கசடை எப்படிப் பயனுள்ள வகையில் பயன்படுத்தலாம் என்று ஆராய்ந்திருக்கிறார்கள்.
கட்டுமானத்திற்கான கற்கள், ஓடுகள், பிற பீங்கான் பொருட்களைத் தயாரிக்க இதை மூலப் பொருளாக எடுத்துக் கொள்ளலாம் என்பது அண்மைக்கால ஆராய்ச்சிகளின் முடிவாகும். இதை வணிக ரீதியில் கட்டுப்படியாகக் கூடிய விலையில் உற்பத்தி செய்து பயன்படுத்தலாம்.

மூலப்பொருட்களில் உள்ள சில நச்சுக்கள் தயாரிப்புப் பொருளிலும் இடம் பெற்றுவிட நேர்வது விரும்பத்தக்கதல்ல.  இருப்பினும் இந்த நச்சுக்களின் விகிதம் தர நிர்ணய விதிமுறைகளின்படி ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவை விடக் குறைவாகவே காணப்படுகிறது.இரும்பாலைக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் கற்களும் ஓடுகளும் மிகச் சிறந்த வலுவைக் கொண்டவையாக இருப்பதால் இவற்றில் உள்ள சிறு சிறு குறைகளைக் கண்டு கொள்ளத் தேவையில்லை என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
கனமான தாய்ச்சுவர்களுக்கு இந்த இரும்பு கற்கள் மிகப் பொருத்தமாக இருக்கும்.

கட்டுமான இயந்திரங்களை வாங்கும்போது !


நீங்கள் செய்யும் தொழிலுக்கு ஏற்ற இயந்திரம் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டுமானால் சில அடிப்படை விசயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.வாங்குகிற இயந்திரம் தொல்லையற்றதாக இருக்க வேண்டும். எப்போதாவது இயங்க மறுக்கும் நிலை ஏற்பட்டால் நீங்களே சரி செய்து கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். அல்லது விற்பனைசெய்த நிறுவனமே உடனடியாகத் தக்க ஆட்களை அனுப்பி வைக்குமா, துணை பாகங்கள் கிடைக்குமா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இயக்குவதற்கு எத்தனை ஆட்கள் தேவைப்படுவார்கள்? இந்த எண்ணிக்கை அதிகமா? குறைவா? கட்டுபடியாகும் அளவுக்குள் இருக்க வேண்டும். மூலப் பொருட்களைப் பயன்படுத்துவதில் சிக்கனமாக நடந்து கொள்ளுமா? விரையங்கள் குறைவாக இருக்குமா? சேதங்கள் தவிர்க்கப்படுமா? வேறு பல இயந்திரங்களுடன் இணைத்து இயக்குவது சாத்தியமா?
தயாரிக்கப்படும் பொருட்கள் குறைவற்றவையாக அளிக்கப்படுமா? 100 பகுதிகளைத் தயாரித்துத் தரும் இயந்திரத்தின் அளிப்பில், எத்தனை பொருட்களில் குறை இடம் பெற்றிருக்கும்? அவற்றை வாடிக்கையாளர்கள் ஏற்க மறுப்பார்கள். இந்த வகையில் வீண் என்று ஒதுக்கப்படும் எண்ணிக்கை எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக இருக்குமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. தயாரிப்புப் பொருளின் தரம் எப்போதும் நிலை நிறுத்தப்படுமா? அண்மைக் காலத்தில் ஏதாவது மாற்றங்கள் புகுத்தப்பட்டிருக்குமானால் அதை இயந்திரத்
திலும் ஏற்படுத்திக் கொள்ள வழி இருக்கிறதா? இப்போது செய்யும் வேலைக்குத் தேவை இல்லாமல் போகக் கூடிய நிலை ஏற்படுமா? காலத்திற்கேற்பவும் தேவைக்கேற்பவும் சிற்சில மாற்றங்களைச் செய்து கொண்டு இயந்திரத்தைத் தொடர்ந்து இயக்க முடியுமா? இயந்திரத்தின் ஆயுட் காலம் எவ்வளவு? ஆயுள் முடிந்தபின் அதை விற்க நினைத்தால் எவ்வளவு கிடைக்கும்? விற்கக் கூடிய விலை அதிகமாக இருக்குமா? அடிமாட்டு விலைக்குத்தான் கேட்பார்களா? ஒரு மணி நேரம் அல்லது ஒரு நாள் என்கிற கணக்கில் இயக்குவதற்கு எவ்வளவு செலவாகிறது? நிகரமாக நிற்கக் கூடிய லாபம் எவ்வளவு?

இயந்திரத்தின் விலை முழுவதையும் ரொக்கமாகவே கொடுத்து வாங்க வேண்டுமா? நிதி உதவி கிடைக்குமா? வங்கிகள் உதவிக்கு வருமா? தயாரிப்பு நிறுவனமே ஏற்பாடு செய்யுமா? வட்டி விகிதம் எவ்வளவு இருக்கும்? சலுகை,
மானியம், தள்ளுபடி, இலவச இணைப்பு போன்ற வழிகளில் ஆதாயம் கிடைக்க வழி இருக்கிறதா?
விற்பனைக்குப் பிந்தைய சேவை எப்படி இருக்கும்? பராமரிப்புப் பணிகளுக்கு அதிகம் செலவிட நேருமா? இயந்திரத்தை இயக்குவதற்கு என்றே தனிப் பயிற்சியை ஊழியர்களுக்கு அளிக்க வேண்டி இருக்குமா?
இதே வகை இயந்திரத்தை இதற்கு முன் யார், யார் வாங்கி இருக்கிறார்கள்? அவர்களைப் பார்த்துக் கருத்துக் கேட்க முடியுமா? அவர்களது அனுபவங்கள் உங்களுக்குப் பாடமாக அமைய வாய்ப்பிருக்கிறதா? இயந்திரத்தை நாமே பயன்படுத்துகிறோமா? வாடகைக்கு விட முடியுமா? எவ்வளவு வருவாய் வரும்? சொந்த உபயோகத்திற்கும் வாடகைக்கும் மாற்றி  மாற்றிப் பயன்படுத்துவது சாத்தியம்தானா?  இதெல்லாம் நன்கு ஆராயுங்கள்.

அலுமினியம் டெலஸ்கோப்பிக் ஃப்ளையிங் ஃப்ரேம்கள் !


மூன்றே நாட்களில் சென்ட்ரிங் பணிகளை முடித்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போக வேண்டுமா? அலுமினியம் டெலஸ்கோப்பிக் ஃப்ளையிங் ஃப்ரேம்களைப் பயன்படுத்துங்கள்.
இந்தப் புதுமையான படைப்பை வழங்குபவர்கள் ஹை லைஃப் சிஸ்டம்ஸ் நிறுவனத்தினர். கட்டுமானத் தொழிலுக்கான இயந்திரங்கள், சாதனங்களை உருவாக்கி அளிப்பதில் இவர்கள் உலகப் புகழ் பெற்றவர்கள்.  இப்போது இவர்களது தயாரிப்புகள் இந்தியாவிலும் கிடைக்கத் தொடங்கிவிட்டன.

எந்த வேலைக்கு ஏற்றது?

அலுமினியம் டெலஸ்கோப்பிக் ஃப்ளையிங் ஃப்ரேம்களைப் பலவிதமான வேலைகளுக்கும் பயன்படுத்தலாம். அதிக எண்ணிக்கையிலான தளங்களைக் கொண்ட மாடிக் கட்டுமானங்களுக்கு இவை பெரிதும் பொருத்தமானவை. அடிப்படைக் கட்டமைப்புத் தேவைகளை நிறைவேற்றுவதற்காகப் பெரிய அளவில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கும் இவை பேருதவியாக இருக்கும்.
தனித் தனி பாகங்களைக் குறிப்பிட்ட வகையில் இணைத்தால் போதும். எல்லாம் நொடியில் தயாராகிவிடும். இந்த வகையில் செயல்படும்போது ஒரு வேலையை முடித்துவிட்டு அடுத்த வேலையைத் துவக்குவதற்கு உரிய கால இடைவெளி மிக மிகக் குறைவாகவே ஆகும். எடை குறைவான பாகங்கள் என்பதால் இணைப்பு வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்களும் களைப்பின்றிப் பணியாற்ற முடியும். வேகமாகவும் செய்து முடித்துவிடலாம்.

தளங்களின் உயரங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அதேபோல், கட்டட வடிவமைப்பும் சிக்கலானதாகவும் இருக்கலாம். அலுமினியம் டெலஸ்கோப்பிக் ஃப்ளையிங் ஃப்ரேம்கள் உங்கள் வேலைகளை எளிதாக்குகின்றன.
வழக்கமான முறையில் அமைக்கப்படும் கட்டடத் தளங்களிலும், வழக்கத்திற்கு
மாறான தளங்களிலும் கூட இவற்றைப் பயன்படுத்த முடியும். பல கட்டடங்களில் தளங்களின் உயரம் ஒரே மாதிரியாக அமைவது கிடையாது. அம்மாதிரியான கட்டுமானங்களில் சிரமமே இல்லாமல் வேலைகளைச் செய்வதற்கு
அலுமினியம் டெலஸ்கோப்பிக் ஃப்ளையிங் ஃப்ரேம்களே ஏற்றவை.

தேவைப்படும் நீளம் அல்லது உயரத்திற்கு மாற்றி  அமைத்துக் கொள்ள இவற்றி ல் உள்ள பின்களை வெளியில் இழுத்தாலே போதும். சரிக்கட்டிக் கொள்ளலாம். தேவைப்படும் உயரத்தை எட்டிய பிறகு பின்களை அவற்றின் இடத்தில் பொருத்தினால் வேலை முடிந்தது.
உலகப் புகழ் பெற்ற வேர்ல்ட் ட்ரேட் சென்டரைக் கட்டியவர்கள் யார் என்று தெரியுமா? கால்லவினோ குழுமம் என்ற நிறுவனம்தான். அவர்கள்தான் கனடாவில் உள்ள டொரன்டோ நகரில் ஒரு கட்டுமானத் திட்டத்தை நிறைவேற்றி  வருகிறார்கள். இங்கும் இவர்கள் அடுத்தடுத்த வேலைகளை மூன்றே நாட்கள் இடைவெளியில் மேற்கொள்வதற்கு அலுமினியம் டெலஸ்கோப்பிக் ஃப்ளையிங் ஃப்ரேம்களே உதவி இருக்கின்றன.

இந்தியாவிலும் கூட இதே மாதிரியான வேகத்தில் கட்டுமானவேலைகளை முடிக்க முடியும். எல் அண்ட் டி நிறுவனத்திற்கான கட்டுமானம் ஒன்றில் அடுத்தடுத்த வேலைகளை ஐந்து நாள் இடை வெளியில் முடிக்க முடிந்திருக்கிறது.
வெகு வேகமாக முடித்துவிட முடியும் என்பதால் காலமும் மிச்சமாகும். இது மறைமுக இலாபத்திற்கு வழி வகுக்கும். செலவு அடிப்படையில் கடுமையான சிக்கனத்திற்கு உதவும். மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஆட்களே போதும். பிரித்தெடுக்கும் வேலைகளை விரைவாகச் செய்துவிடலாம்.பாகங்களின் எடை மிகவும் குறைவாக இருப்பதால் கிரேன்களைப் பயன்படுத்த வேண்டிய நேரமும் குறைவாகவே ஆகும். கிரேன்களுக்கான வாடகை, இயக்கச் செலவு ஆகியவையும் குறைவாகவே ஆகும்.

பொருள் ஒன்று பயன் இரண்டு ஜெட்ரிவால் ஒட்டுபசை !..


ஒட்டுப்பசைகளை ஒட்டுகிற தேவைகளுக்கு மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்பது உங்கள் எண்ணமாக இருக்கலாம். இல்லை.
அதே பசையை நீர்க்கசிவைத் தடுப்பதற்குரிய பொருளாகவும் பயன்படுத்தலாம்.
இதில் கிடைக்கும் நன்மைகள் : ஜெட்ரிவால் ஒட்டுப்பசையைக் கொண்டு செராமிக்(பீங்கான்) ஓடுகளை ஒட்டுவது எளிதானது. பிடி
மானமும் உறுதியாக இருக்கும். சிறு சிறு இடைவெளிகள், காலி இடங்களில் பழுதுபார்ப்பு, அலங்கரிப்பு நோக்கிலான ஒட்டு வேலைகளைச் செய்வதற்கும் இதைப் பயன்படுத்தலாம்.
மின்சாரத்தைக் கடத்த அனுமதிக்காத வகையில் அமைக்கப்பட வேண்டிய தட்டையான பலகைகளை ஒட்டுவதற்கும் இது பொருத்தமானது.வழக்கமான ஒட்டு வேலைகளுக்கு 15 முதல் 20 மி.மீ கனத்திலான ஒட்டுப்பரப்பு தேவைப்படும். ஜெட்ரிவால் ஒட்டுப்பசையை ஒரு மி.மீ கனத்திற்குப் பரப்பினாலே போதும். உறுதி ஒட்டு உறுதி.

எப்படிப் பயன்படுத்துவது?

ஜெட்ரிவால் ஒட்டுப்பசையை எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். மாற்றிச் செய்து விட்டு மாட்டிக் கொள்ளக் கூடாது.கடைகளில் வாங்கி வரும் ஜெட்ரிவால் ஒட்டுப்பசையைத் தண்ணீருடன் சேர்க்க வேண்டும். தண்ணீரை இதனுடன் சேர்க்கும் வேலையைத் தவிர்க்க வேண்டியது முக்கியமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். இப்படிச் சேர்த்துக் கொண்டே வரும் போது ஓரளவு திடமான பசை வரும் நிலையில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.தண்ணீரில் ஜெட்ரிவால் ஒட்டுப்பசையைக் கலந்த பிறகு சுமார் பத்து நிமிடங்கள் வரை அப்படியே வைத்து இருங்கள். அவ்வாறு வைத்திருந்த பிறகே பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும். வழக்கமான  கொலுத்துக் கரண்டிகளைப் பயன்படுத்தலாம். கலவையைத் தேவைப்படும் இடத்தில் பரப்பிய பின் பொழியப்பட்ட கரண்டியைக் கொண்டு தேய்த்துவிட வேண்டும். இது ஜெட்ரிவால் ஒட்டுப்பசையைச் சிக்கனமாகப் பரப்ப உதவும்.  அதிகப்படி பசையைத் தேய்த்து எடுத்துக்கொண்டு வந்துவிடும்.

கலவையின் மேல் ஓடுகளை அழுத்திக்கொண்டு இலேசாகச் சுழற்றிக் கொடுக்க வேண்டும்.  ஒட்டப்படுவதற்கு முன் ஓடுகளையும், ஒட்டப்பட வேண்டிய பகுதிகளையும் நனைக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஓடுகளைப் பதித்தபின் கரண்டிக் காம்பால் தட்டிக் கொடுக்கும் வேலைக்கும் தேவை இல்லை.  வழக்கமான ஒட்டு வேலைகளில் பின்பற்றப்படும் இம்மாதிரியான பல தேவைகளைத் தவிர்க்க முடியும் என்பதால் ஓடுகள் சிதைந்து வீணாவது குறையும். சிக்கனம் கிடைக்கும். நேரமும் உழைப்பும் கூலியும் மிச்சமாகும்.  வழக்கமான முறையில் ஓடு ஒட்டும் வேலைகளை மேற்கொள்வதைப் போல் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகப்படி வேலைகளை அதே நேர அளவிற்குள் முடித்துவிடலாம்.

ஒட்டும் தன்மை உறுதி மிக்கதாக இருக்கும். தண்ணீர்க் கசிவிற்கு இடமிருக்காது. ஒட்டப்படும் ஓடுகளுக்கு இடையே ஏற்படக் கூடிய இடைவெளிகளை அடைக்க ஜெட்ரிவால் ஒட்டுப்பசை எஃப்எம் என்பதைப் பயன்படுத்தலாம்.இந்த வேலையைச் செய்து முடிக்க வெள்ளை நிறப் பசையைப் பயன்படுத்த வேண்டி வரும். ஒட்டப்பட்ட ஓடுகளின் நிறத்துடன் இது மாறு
பட்டு இருக்குமே.. அழகைக் கெடுக்குமே என்றும் கவலைப்படத் தேவையில்லை.ஓட்டின் நிறத்தைப் போலவே ஒட்டுஇடைவெளிகளையும் நிறமேற்றிவிட முடியும். இதற்குப் பல வித வண்ணங்களில் ஸ்டெயினர்கள் கிடைக்கின்றன.

மாடர்ன் தொழிற்நுட்பம் மாடுலர் பேனல் சிஸ்டம் !



கட்டுமான உத்திகளுள் குறிப்பிடத் தக்கது எம்பிஎஸ் என்னும் முறை. மாடுலர் பேனல் சிஸ்டம்  (Modular
Pannel System)  என்பதைத்தான் சுருக்கமாக எம்பிஎஸ் என்று குறிப்பிடுகிறார்கள். மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த பாஸ்சல் நிறுவனம் இத்தகைய எம்பிஎஸ் முறையை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இவர்களது தயாரிப்புகளுக்கு உலகெங்கும் பெரும் வரவேற்பு உண்டு. இந்தியாவிலும் இவர்களது சேவை தேவை என்று பல வாடிக்கையாளர்கள் வற்புறுத்தி வந்தார்கள். இந்தக் கோரிக்கையை ஏற்று பாஸ்சல் நிறுவனம் தனது கிளையை ஹைதராபாத்தில் உள்ள ஜூபிலி ஹில்ஸில் துவக்கி இருக்கிறது. இவர்களது உற்பத்தி ஆலை விசாகப்பட்டினத்தில் இயங்கி வருகிறது.

சிறப்பம்சங்கள்:

எம்பிஎஸ் வெவ்வேறு அளவுகளைக் கொண்ட பேனல்களைத் தயாரித்துத் தருகிறது.  இவை உறுதி மிக்கவை. நீடித்து உழைக்கக் கூடியவை. இவற்றைத்  தயாரிப்பதற்கு 6 மி.மீ தடிமன் கொண்ட இரும்புத் தகடுகளைப் பயன்படுத்துகிறார்கள். இவை எளிதில் அரிப்பிற்குள்ளாகாத உயர்ந்த தரம் உடையவை. இந்தப் பாளங்களின் முகப்புப் பகுதியில் தரம் உயர்ந்த பின்லாந்து நாட்டின் பிர்ச் மர பிளைவுட் பலகைகளைப் பொருத்தி இருக்கிறார்கள்.  கன மீட்டருக்கு 780 கிலோ என்ற அளவிலான அடர்த்தி கொண்டவை இவை.  ஆகவே உறுதிக்குக் குறைவில்லை.
இந்தப் பிளைவுட் பலகைகளின் மேற்புறத்தில் பீனால் அடிப்படையிலான பிசினைக் கொண்ட பூச்சும் கொடுக்கப்பட்டிருக்கிறது.பிளைவுட் பகுதிகளின் விளிம்புகள் சேதம் அடைந்துவிடாமல் இருப்பதற்காக இரும்புத் தகடுகளைக் கொண்டு மூடப்பட்டுள்ளன.
மேலும் ஒரு பேனலுக்கும் மற்றொரு பேனலுக்கும் சட்டங்கள் மற்றும் புறப்பரப்பிற்கு இடையில் இடைவெளியை அடைக்கத்தக்க விதத்தில் பொருத்தமான நிரப்பிகளையும் பயன்படுத்துகிறார்கள். இதனால் இணைப்புகளுக்கு இடையில் கசிவே ஏற்படாது.இந்த வகைப் பேனல்களை அதிகத் தடவைகளுக்கு மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.  சுமார் 300 தடவைகள் வரை பயன்படுத்த முடியும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. சட்டங்கள் இரும்பினால் ஆனவை என்பதால் அவற்றின் ஆயுளும் நீண்ட காலம் நீடிக்கும்.
நேரான சுவர்கள், வட்ட வடிவச் சுவர்கள்,கிணறு போன்ற பள்ளம், தூண் எதை வேண்டுமானாலும் எம்பிஎஸ் மூலம் உருவாக்கலாம். கான்கிரீட்டைக் கலந்ததும் உடனடியாகக் கொட்டிக் கட்டுமானத்தை உருவாக்க வேண்டிய தேவை உள்ள எந்த வேலைக்கும் இந்த தொழிற்நுட்பம் ஏற்றது.

அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் பெரிய பெரிய திட்டங்களுக்கு இந்த முறையைப்பின்பற்றுவது பெரிதும் பலனளிக்கும். பெரிய தொழிற்சாலைகள், நீர் சுத்திகரிப்பு ஆலைகள், கால்வாய்கள், பாலங்கள், அணைகள் என எதை
வேண்டுமானாலும் கட்டுவதற்கு எம்பிஎஸ் ஏற்ற முறையாக இருக்கும்.

சோலார் பெயிண்டும் சோலார் கொடியும் !


ஒவ்வொரு வீட்டிலும் சோலார் மின்சாரம் தயாரிக்க அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் வற்புறுத்தினாலும், அது நடைமுறையில் பொருளாதார சிக்கல்களை உடையதாக இருப்பதால் பெரும்பாலும் பரவலாக்கப்படாமல் இருக்கிறது.ஆனால், தற்போது கட்டுமானத்துறையில் பரபரப்பாக பேசப்படுவது திரவ நிலையில் சோலார் பேனல்கள்.
அதாவது,சோலார் பெயிண்டுகள் மூலம் மின்சாரம் தயாரிப்பது பற்றிதான்.

சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல்களை திரவ வடிவில் உருவாக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.தரையிலும்,சுவரிலும் சோலார் பேனல் பெயின்டை அடித்தால் வீட்டுக்கு வீடு, தரைக்கு தரை, சுவருக்கு சுவர் மின் உற்பத்தி நடக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.இதுபற்றி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள பஃபல்லோ பல்கலைக்கழக எலெக்ட்ரிகல் இன்ஜினியரிங் துறை பேராசிரியரும், ஆராய்ச்சியாளருமான கியாவ்கியாங் கான் கூறியபோது:

  “ஒளி ஆற்றலை மின்சாரமாக மாற்றும் திறன் பெற்ற சோலார் செல்களின் தொகுப்புதான் சோலார் பேனல் எனப்படுகிறது. பொதுவாக பாலி கிரிஸ்டலைன் சிலிகானை கொண்டுதான் இந்த பேனல் உருவாக்கப்படுகிறது. மெலிதான பிலிம் போல பேனலை தயாரிப்பதென்றால்  அதிகசெலவு ஏற்படுத்தக்கூடியவை. குறைந்த செலவிலான சோலார் பேனல்களை உருவாக்கும் முயற்சி உலகம் முழுக்க நடக்கிறது. அந்த வகையில் பிளாஸ்மோனிக் தன்மை கொண்ட ஆர்கானிக் வகை பொருட்களை சோலார் பேனலாக பயன்படுத்தினால் அதிக மின் உற்பத்தி செய்ய முடியும், செலவும் குறைவு என கண்டறியப்பட்டுள்ளது.மேலும், இது திரவ வடிவில் இருப்பதால் பயன்படுத்துவதும் எளிது. திரவ வடிவில் இருக்கும் சோலார் பேனலை சுவர், தரை என எந்த பகுதியிலும் பெயின்ட் போல எளிதில் பூச முடியும். வெளிச்சம் கிடைக்கும் எல்லா இடத்திலும் இந்த பெயின்ட் அடித்தால் மின் உற்பத்தியும் அதிகளவில் நடக்கும். இது மட்டுமன்றி, கார்பனை அடிப்படையாக கொண்ட சிறு மூலக்கூறுகள், பாலிமர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி பிலிம் வகை சோலார் பேனல் உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம். இவற்றையும் குறைந்த செலவில் தயாரிக்க முடியும்” என்று
கியாவ்கியாங் கான் கூறினார்.

இது ஒருபுறம் இருக்க, நியூயார்க்கில் இன்னொரு குழுவினர் சோலார் கொடிகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் கண்டுபிடிப்பில் வெற்றி கண்டுள்ளனர். ஏராளமான செயற்கை இலைகளை கொண்டு கொடிகளாக தயாரிக்கப்பட்டுள்ள இதற்கு ‘சோலார் ஐவி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.இந்த கொடிகளை வீட்டு வெளிப்புற சுவர்களில் படரவிட்டால் போதும். இயற்கையான கொடிகளை போன்று கண்ணைக் கவரும் விதமாக அழகாக படர்ந்திருக்கும். வீட்டுக்குத் தேவையான மின்சாரத் தேவையையும் இதன் மூலம் பூர்த்தி செய்து கொள்ளலாம். இதில் நுண்ணிய போட்டோவோல்டெய்க் பேனல்கள் என்ற தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும். இவை சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும். தேவைப்படும் மின்சாரத்துக்கு ஏற்ப கொடிகளை படரவிடலாம். பல வண்ணங்களிலும், வடிவங்களிலும் கொடிகள் கிடைக்கும். இதனால் எந்த பாதிப்புகளும் இருக்காது. இறுதிகட்ட ஒப்புதலையடுத்து விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

உங்கள் வீட்டு கூரை பாதுகாப்பானதா?



நமது வீட்டுக்கூரை அமைக்கும்போது முக்கியமான சில விஷயங்களை அலசி ஆராய்வோம்.வெப்பத்தைத் தடுக்க வேண்டும். நீர்க்கசிவு இருக்கக்கூடாது. கரைகள் ஏற்படுத்தக்கூடாது, பாசிகள் படரக்கூடாது, முக்கியமாக வழுக்கக்கூடாது. ஆனால், நாம் வாங்கும் கூரை கட்டுமான பொருட்களுக்கு (டைல்ஸ்) இவற்றில் ஒரு தன்மை இருந்தால், இன்னொரு தன்மை இருக்காது. ஆனால், இந்த அனைத்து தன்மைகளும் ஒருங்கே பெற்ற புதிய டைல்தான் ரூஃப் ப்ளஸ் டைல்கள்.

100 சதவீத வெதரிங் கோர்ஸ் டைலான ரூஃப் ப்ளஸ் டைல்களைத் தயாரித்து அளிக்கும் ராசி டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான
திரு.சந்திரசேகரை கேட்ட போது  ‘‘வீடு கட்டும் சாதாரண மக்கள் தங்கள் கூரைகளை பாதுகாப்பாக அமைக்கத் தவறி விடுகிறார்கள். கூரை என்பது வெப்பத்தை தடுப்பதற்கும், நீர்க்கசிவு ஏற்படாமல் காப்பதற்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கட்டிடத்தின் உறுதியை
காப்பாதாக அமைய வேண்டும். அதாவது, சாதாரண கூரை தளங்கள் 1 ச.அடிக்கு 15 முதல் 17 கிலோ எடையுள்ளதாகவும், அதுவே மழைக்காலத்தில் 20 கிலோ எடையுள்ளதாகவும் கனக்கிறது. ஆனால், ரூஃப் டைல்கள் கொண்டு கூரை அமைக்கும்போது எல்லா காலங்களிலும் அதிகபட்சம் 7 கிலோவிற்கு மேல் கனம் இருக்காது.
எனவே, கட்டிடத்திற்குத் தேவையற்ற கனத்தை கொடுக்காததும், சூடான வெப்பக் கதிர்களை உள் வாங்காததும், அறைகளின் குளுமையை வெளியே கடத்தாததும், நீர்க்கசிவிற்கு ஒரு துளியும் இடம் கொடுக்காததுமான வெகு சிக்கனமிக்க பசுமைக்கட்டிட பொருளான ரூஃப் ப்ளஸ் டைல்கள் உங்களுக்கு மிகச் சிறந்த பாதுகாப்பான கூரையை தரும் என்பதில்
ஐயமில்லை’’.

கூரைகளுக்கு ரூஃப் ப்ளஸ் டைல்களை பொருத்தும் முறை பற்றி...
‘‘பழங்காலம் போல, சுண்ணாம்பு பவுடர், கடுக்காய் போன்ற பல பொருட்களைக் கொண்டு நாள் கணக்கில் வெதரிங் கோர்ஸ் அமைக்க இனியும் தேவை இருக்காது. சாதாரண கான்கிரீட் தளம் மீது நமது டைல்களை அமைக்கலாம். முதலில் ரூஃப் ப்ளஸ் டைல்களை சுத்தமான நீரில் 20 நிமிடங்கள் ஊற வைத்துவிட வேண்டும். தளங்களின் மேற்பரப்பை சீர்படுத்தி, சிமெண்ட் கலவையை பூச வேண்டும். (எங்களிடம் உள்ள விசேஷ மான ரசாயன பூச்சை டைல்களின் இடையில் கிரௌட்டிங் மீது பூசிவிட்டால் நீர்க்கசிவு இருக்காது).

   பிறகு ரூஃப் ப்ளஸ்டைல்களை ஒட்டிவிட்டால் அவ்வளவு தான், வேலை முடிந்தது’’ என்றார்.
ஐ.ஜி.பி.சி (இந்தியன் கிரீன் பில்டிங் ஹவுசிங்) சான்றிதழ் பெற்ற இந்த ரூஃப் ப்ளஸ் டைல்கள் ஒரு சதுர அடி அளவில் பல வண்ணங்களில் கிடைக்கின்றன என்பதாலும், கூரைகளில் பொருத்துவது எளிது என்பதாலும் இதற்கு அதிக அளவு வரவேற்பு உள்ளது.
கட்டுநர்கள் தங்களது புராஜெக்டுகளில் பயன்படுத்த மிகவும் உகந்தது  ரூஃப் ப்ளஸ் டைல்ஸ்கள் என்பதோடு அதிக எண்ணிக்கையில் கொள்முதல் செய்யும் கட்டுநர்களுக்கு வெகு சிக்கன விலையில் கிடைக்கிறது ரூஃப் ப்ளஸ் டைல்கள்.