உலர் காரை தயாரிக்க உருப்படியான இயந்திரம் !



காரை என்றால் தயாரிப்பு மற்றும் பயன்படுத்தும் நேரங்களில் ஈரமாகத்தானே இருக்கும் என்கிற சந்தேகம் பலருக்கும் ஏற்படும். பயன்படுத்தப்பட்ட பிறகுதானே காரை உலர வேண்டும் என்றும்  எண்ணுவார்கள். அது என்ன உலர் காரை?உலர் காரை என்பது ஒரு புதிய தொழிற்நுட்பம்.  காரைக்கான தேவை அதிக அளவு இருக்கும்போது இந்தத் தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். இதனால் உற்பத்தித் திறன் உயரும். வேலைகளை விரைந்து முடிக்கலாம்.

தரம் எப்படி?

உலர் காரையைப் பயன்படுத்துவது கட்டுமானத்தின் தரத்தைப் பாதிக்குமா? அது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. உலர் காரையின் தரம் என்பது கலவை விகிதத்தைப் பொறுத்தது. கலவை எந்த அளவுக்குச் சீராக உருவாக்கப்படுகிறது என்பதை வைத்தும் தரத்தை முடிவு செய்யலாம். எனவே, தரமான உலர் காரையைத் தயாரிப்பதில் கவனமாகச் செயல்பட வேண்டும்.

காரையின் தேவைகாரையை எந்தெந்த வேலைகளுக்குப் பயன்படுத்துகிறோம்? செங்கல் கட்டுமான வேலைகளுக்கு இது அவசியம் தேவைப்படும். இணைப்புகளை வலுவுள்ளவையாக ஆக்குவதற்கும் காரை வேண்டி இருக்கும். ஓடுகளை  அதனதன் இடத்தில் ஒட்டிப் பதிப்பதற்கும் காரை முக்கியம். மெல்லிய இடு தளத்தை உருவாக்கவும் காரையைப் பயன்படுத்த வேண்டும். இப்படிப் பார்க்கும்போது ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு விதத்தில் காரையைத் தயாரிக்க வேண்டி இருக்கிறது. காரைத் தயாரிப்பு முறைகளும் வேறுபடுகின்றன.

இந்த வேலைகளை எல்லாம் பொதுவாக ஒரே இயந்திரத்தில் செய்ய முடிந்தால்? இந்தச் சிந்தனையின் விளைவாக, நார்வேயைச் சேர்ந்த ஃபோர்பெர்க் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டதுதான் டாஷ்வால் இரட்டைஷாஃப்ட் உலர் காரைக் கலவை இயந்திரம்.

நன்மைகள் என்ன?

கலவையின் தரம் மிக உயர்ந்ததாக இருக்கும். எதிர்பார்க்கும் தரத்திலான கலவையை எளிதில் உருவாக்கிவிடலாம். கலவையைத் தயாரிப்பதற்குத் தேவைப்படும் நேரத்தைக் கணிசமாகக் குறைக்கலாம்.  உற்பத்தி ஆலையின் செயல் திறனை மேம்படுத்தலாம். பராமரிப்புத் தேவைகள் குறைந்த அளவுக்கே இருக்கும்.
கலக்கும் வேலையைச் செய்யும் இயந்திரப் பகுதிகளில் உராய்வு, சிக்கல் என எதுவும் ஏற்படாதவகையில் கலக்க வேண்டிய பொருட்கள் உள்ளுக்குள் இடப்பட வசதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் இயந்திரத்தின் தேய்மானம் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும். இது இயந்திரம் நீண்ட காலம் உழைப்பதற்கு வழி வகுக்கும்.

கலவைகளைத் தயாரிக்க எவ்வளவு நேரம் ஆகும் என்று நீங்கள் ஒரு கணிப்பை வைத்திருப்பீர்கள். ஆனால் இந்த இயந்திரத்தின் மூலம் 3 விநாடிகள் முதல் 3 நிமிடங்களுக்குள் கலவை வேலைகளை முடித்துவிடலாம் என்று சொன்னால் நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கும். கலக்கும் வேலைகள் சீராகவும் ஆரவாரத்திற்கு இடமில்லாமலும் அமைதியாக நடக்கும். மிகக் குறைந்த பராமரிப்பே போதும். மின்சாரமும் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படும். கட்டுமானத் தொழிலின் சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில் இந்த இயந்திரங்கள் வடிவமைக்கப்படுகின்றன. சொந்த உபயோகத்திற்கு மட்டுமின்றி, வியாபார ரீதியாகவும் இதை பயன்படுத்த முடியும்.