சாரம் கட்டுதலில் சாதித்த வெள்ளையர்! மே -2013


கட்டுமானப்பணிகளில் சாரம் கட்டுதல் மிக முக்கிய அம்சமாகும். இதை ஓரளவு எளிமைப்படுத்திய பெருமை இங்கிலாந்தைச் சார்ந்த ஜாக்ஸன் என்கிற பொறியாளரையேச் சாரும்.

 கட்டுமான வேலைகளில் சாரம் அமைப்பதற்கே கணிசமான நேரம் செலவாகிறது என்பதைக் கண்டுணர்ந்த ஜாக்ஸன், இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்க வேண்டும் என்று முழுமூச்சாக இறங்கினார்.

அவ்வாறு அவர் செய்த முயற்சியின் விளைவாகத்தான் ஒற்றைக் கம்பச் சாரம் அமைப்பு முறையை உருவாக்கினார். இரவில் இந்தச் சாரத்தை அமைத்தால் விடிந்ததும் கட்டுமான வேலைகளை விரைவாக முடித்துவிடலாம். என்றாலும், இந்தக் கண்டுபிடிப்பே போதும் என்று ஜாக்சன் ஓய்வெடுத்துக்கொள்ளவில்லை.

இரும்புக் குழாய்களைக் கொண்டு வேகமாகவும் எளிதாகவும் உறுதியாகவும் சாரம் அமைக்கும் முறையைக் கண்டுபிடித்தார். வேண்டிய உயரத்திற்கு உயர்த்தவும் தாழ்த்தவும் இதில் வசதிகளைப் புகுத்தினார். பயன்படுத்திப் பார்த்த வாடிக்கையாளர்கள் ஜாக்சனுக்குக் கணிச மான ஆர்டர்களைக் கொடுத்தார்கள். என்றாலும் கூட ஜாக்சனுக்கு இதில் திருப்தி ஏற்படவில்லை.காரணம், இரும்புக் குழாய்கள் கன மானவை. கையாள்வதற்குக் கடினமானவை.பராமரிப்புச் செலவும் கூடுதலாக ஆகும்.

அடிக்கடி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பெயிண்ட் அடிக்க வேண்டும். கட்டுமான வேலைகள் நடைபெறும் இடங்களில் ஏற்படும் தூசிகளால் சாரங்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது.கனமான சாரக் கம்பங்களைத் தூக்கிச் செல்ல அதிக உடலுழைப்புத் தேவைப்படும்.இதனால் கூலிச் செலவு அதிகமாகும். கால தாமதம் ஏற்படும்.

இத்தகைய குறைகள் எல்லாவற்றையும் களைய வேண்டும் என்று ஆசைப்பட்டார் ஜாக்ஸன்.அப்படித்தான்அவர் அலுமினியத்தால் ஆகிய சாரங்களை அமைப்பதில் பெரும் வெற்றிகண்டார். உலகிலேயே முதன்முதலில் அலுமினியத்தால் உருவாக்கப்பட்டு எளிதில் இயக்கப்படக் கூடிய சாரத்தை அவர் உருவாக்கினார்.இந்தச் சாரத்தைக் கொண்டு ஒரு சட்டத்திற்கு 10886 கிலோ வரை தாங்க முடியும். பவுண்ட் எடைக் கணக்கில் இது 24000. இப்போது இந்தச் சார வகைகளை 12 கே என்று குறிப்பிடுகிறார்கள்.

சாலைப் பணிகளுக்கு உதவும் எக்ஸ்டெண்டிங் ஸ்கிரீட்!ஜூன்-2013



ஸ்கிரீட் என்றால் என்ன என்று உங்களுக்கு எளிதாகப் புரிய வேண்டும் என்றால் திமிசுக் கட்டை என்று சொல்லலாம்.

 இது அளவில் சிறியதாக இருக்கும். இதையே , பெரிய அளவில் இயந்திரங்களைக் கொண்டு இயக்கும் விதத்தில் தயாரிப்பார்கள். இவை ஸ்கிரீட் எனப்படும். தட்டிக் கொட்டிப் பரப்பி, இறுக்கிவிடும் அளவு குறிப்பட்ட அகலம் கொண்டதாக அமைக்கப்படும் ஸ்கிரீட்கள் வழக்கத்தில் உள்ளன. இதிலேயே இன்னொரு படி மேலே போய், தேவைப்படும் அகலத்தை விருப்பம் போல் நீட்டித்துக் கொள்ள உதவுபவை எக்ஸ்டெண்டிங் ஸ்கிரீட் ஆகும்.இந்த புதிய வகை அறிமுகத்தால், வேலை செய்யக் கூடிய பரப்பின் அகலத்தை இரண்டு முதல் 9.5 மீட்டர் வரை தேவைக்கேற்றபடி மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

 ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் இயந்திரங்களுடன் இந்தப் புதிய வகை ஸ்கிரீட்களையும் இணைத்துப் பயன்படுத்தலாம். 0.5 மீ. முதல் 3 மீ. வரையிலான நீளத்திற்கு மட்டுமே பயன்படுத்தக் கூடிய ஸ்கிரீட்களை இன்னும் அதிக அகலத்தில் வேலை செய்ய வைக்க முடியும் என்பது இந்த கண்டுபிடிப்பினால் ஏற்படும் ஆதாயமாகும்.

 மேலும், வேலையின் தன் மைக்கேற்ப இவற்றை வேறு பல இறுக்கும் சாதனங்களுடன் இணைத்தும் பயன்படுத்த முடியும். கன ரக கட்டுமான இயந்திரங்கள் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்கும் வோஜெல் நிறுவனம் இத்தகைய ஸ்கிரீட்களை அறிமுகம் செய்திருக்கிறது.

தரைப்பரப்புகளை உருவாக்க உதவும் இயந்திரங்கள் வரிசையில் உலகிலேயே முதல் அறிமுகம் என்று சொல்லத்தக்க பதினோரு படைப்புகளை இவர்கள் சந்தைக்கு விட்டிருக்கிறார்கள். புதிய வகை ஸ்கிரீட்களை , இயக்கும் நபர் தனது இருக்கையில் இருந்தபடியே இயக்க முடியும்.

 எளிதான இயக்கத்திற்கு ஹைட்ராலிக் முறையில் இயங்கக் கூடிய பாகங்கள் பொருத்தப்பட்டுக் கிடைக்கின்றன. தார் முதலிய கலவைகளைச் சூடுபடுத்தி, சூடு ஆறாமல் தள்ளிப் பரப்ப வேண்டிய அவசியம் ஏற்படும். இதற்காக, ஸ்கிரீடின் லேயர் கணிசமான அளவில் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அதனை எளிதில் சூடேற வைக்கலாம். மிகக் குறைந்த நேரத்திற்குள்ளாகவே சூடு படுத்திப் பயன்படுத்த முடியும்.

 இரைச்சலைக் குறைத்து இயக்கும் விதத்தில் கவனமாக வடிவமைத்திருக்கிறார்கள். மேலும், இயக்குபவர்களின் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான அமைப்பு பாதுகாப்பை உறுதி செய்கிறது. இந்தச் சாதனத்தை இயக்கும் பொறுப்பில் இருப்பவருக்குப் பல வித இயந்திரக் கருவிகள் உதவியாக இருக்கும் வகையில் அமைத்திருக்கிறார்கள்.

 இரவிலும் கூட இதனை இயக்குவது எளிது. சுழன்று சுழன்று வேலை செய்ய வைக்கலாம். இன்னும் சொல்லப் போனால் கண்ணை மூடிக் கொண்டு இயக்கலாம். எவ்வளவு அகலம் கொண்ட நடைபாதை என்பதை மிகவும் துல்லியமாகக் கணக்கிட்டு அதே அளவுகளுக்கு அமைக்க முடியும்.வேகமாக முன்னே செலுத்த வேண்டுமா? விரைவாகப் பின்னே இழுக்க வேண்டுமா? எளிதாகச் சில சக்கரங்களை இயக்குவதன் மூலம் கடினமான வேலையையும் கஷ்டமே இல்லாமல் செய்யலாம்.

பல அதி நவீன அம்சங்களுடன் இந்த வகைச் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. அடிக்கடி, சாலைப்பரப்புஅளவுகளை மாற்றி வேலை செய்ய வேண்டி இருக்கும் சூழ்நிலைகளுக்கு இது பெரிதும் பொருத்தமானது.

பிபிசி கான்கிரீட் ! மே-2013


பெர்ஃபொரேட்டட் பிளாஸ்டிக் கான்கிரீட் (Perforated Plastic Concrete)என்பதைச் சுருக்கமாகப் பிபிசி என்று குறிப்பிடுகிறார்கள். இந்த வகைக் கான்கிரீட் தயாரிப்பு சற்று வித்தியாசமானது. ஜல்லிகளை 1200 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலைக்கு உயர்த்த வேண்டும். இவ்வளவு சூடாக இருக்கும் ஜல்லிகளின் மேல் துருவப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்ட வேண்டும். சூடான ஜல்லியின் மேல் விழும் பிளாஸ்டிக் இளகும்,

 உருகும்.தொடர்ந்து ஜல்லிகளைக் கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது ஜல்லிக் கற்களின் மேற்புரத்தில் பிளாஸ்டிக் பிசின் மேல் ஒட்டிக் கொள்ளும். கற்களைப் பிசினில் தோய்த்து எடுத்த மாதிரியான ஒரு மேற்பூச்சு உருவாகும். இந்தக் கலவையைச் சுடச் சுட அச்சுக்களில் வார்த்துக் கட்டிகளாக மாற்றிவிட வேண்டும்.

அதன்பின் இந்தக் கட்டிகளைக் கட்டுமானத் தேவைகளுக்குப் பயன்படுத்தலாம். பஜ்ஜிக்கு வாழைக்காயை மாவில் தோய்த்து எடுப்பது போலவும் உதிரி பூந்தியை லட்டு பிடிப்பது போலவும் இந்த வேலைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த வகையில் தயாரித்து எடுக்கப்படும் கட்டிகள் புதுமையான கட்டுமானப் பொருளாகப் பயன்படுத்த ஏற்றவையாக இருக்கின்றன. தீமை விளைவிக்குமா? பிளாஸ்டிக் உருகிக் கற்களின் மேல் படியும் போது , வெப்பத்தில் உருகும் நிகழ்வினால் தொந்தரவு தரக் கூடிய வாயுக்கள் கிளம்புமா? என்கிற சந்தேகம் வரக் கூடும். இது குறித்துக் கவலை கொள்ளத் தேவையில்லை.ஆபத்தான வாயு எதுவும் வெளியிடப்படுவதில்லைஎன்பதால் அச்சமில்லாமல் வேலை செய்யலாம்.

 மேலும், உருகிய பிளாஸ்டிக் குழம்பு நன்றாக இறுக்கிப் பிடிக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது. இது கட்டுமானத்திற்கு உறுதி சேர்க்கிறது. மேற்புறத்தில் பன்மங்களால் பூசப்பட்ட கல் ஜல்லியை அடுத்தபடியாகத் தண்ணீருக்குள் அமிழ்த்தி வைப்பார்கள். இவ்வாறு 48 மணி நேரம் ஜல்லிகள் தண்ணீருக்குள் கிடக்கும். ஜல்லியின் மேல் உருகி ஒட்டிக் கொண்டிருக்கும் மேற்பூச்சானது உரிந்து வராமல் இறுக்கமாக ஒட்டிக் கொள்வதைக் காண இது வாய்ப்பை ஏற்படுத்தும். மேற்பரப்பில் பன்மப் பூச்சு முழுமையாக ஒட்டிக் கொண்டிருந்தாலும் கல் ஜல்லிகளுக்கும், இந்தப் பூச்சுப் படலத்திற்கும் நடுவில் பெரும் எண்ணிக்கையிலான வெற்றிடங்கள் உருவாகி இருக்கும்.

இந்த வெற்றிடங்கள் கட்டுமானம் சுவாசிப்பதற்கு உதவி செய்யும். தனக்குள் அதிக அளவு வெற்றுத் துளைகளைக் கொண்டுள்ள பிளாஸ்டிக் கலவைப் பூச்சு நல்ல உறுதியான பிடிமானமும் மூச்சு விடும் வசதியும் கொண்ட கட்டுமானத்தை உருவாக்க உதவி செய்கிறது.இந்த வகையில் தயாரிக்கப்பட்ட ஜல்லிகளைத் தாருடன் கலந்து பயன்படுத்தும் போது உருவாக்கப்படும் சாலைகள் உயர்ந்த தரமும், நீடித்த ஆயுளும் கொண்டவையாக விளங்குகின்றன.

தூக்குங்க நகர்த்துங்க!ஜூன்-2013


அண்மையில் சென்னை வேளச்சேரியில் பள்ளத்தில் இருந்த ஒரு வீட்டை 6 அடி தூரம் தூக்கி கட்டி மறு சீரமைப்பு செய்திருந்தது ஒரு வட இந்திய தனியார் நிறுவனம். அதன் தொடர்ச்சியாக இன்னும் ஒரு படி மேலே போய் கோவையில் பெரிய பங்களா வீட்டை பாதியாக பிரித்து, அதில் ஒரு பாதியை 35 அடி தூரத்திற்கு நகர்த்தி சாதனை படைத்துள்ளது இன்னொரு தனியார் நிறுவனம். கோவை, சாய்பாபா காலனியில் உள்ள மூன்று தலைமுறை பழமையான மாடி வீடொன்று அதன் உள்ளே உள்ள அனைத்து பொருட்களுடனும் 35 அடி தூரம் நகர்த்தி வைக்கப்பட்டது. வீட்டை நகர்த்தும் இம் முயற்சியை ஹரியானாவைச் சேர்ந்த கட்டுமான கம்பெனி ஒன்று வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. இது குறித்து அவ்வீட்டின் உரிமையாளரின் தந்தை ஆறுச்சாமி கூறியபோது, “கோவை மேட்டுப்பாளையம் சாலையில் எனது மகன் தங்கவேலுக்கு சொந்தமாக 2400 சதுர அடி பரப்பளவில் முதல் தளத்துடன் கூடிய வீடு உள்ளது. கடந்த 2000 ம் ஆண்டு கட்டப்பட்ட வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ.70 லட்சம் ஆகும். வீட்டின் முன்புறம் தங்கவேலுக்குச் சொந்தமாக உள்ள காலி இடத்தில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால், வணிக வளாகம் கட்டுவதற்கு 40 அடி அளவிற்கு இடப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதற்காக வீட்டை இடித்து புதிய வீடு கட்ட ரூ.1 கோடிக்கு மேல் செலவு ஆகும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஹரியானாவைச் சேர்ந்த டி.டி.பி.டி. நிறுவனத்தினர், சாய்பாபா காலனியில் உள்ள வீட்டை சில அடிகள் உயர்த்தினர். இதையடுத்து டி.டி.பி.டி. நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, வீட்டை இடிக்காமல் எவ்வித பாதிப்பும் இன்றி இடமாற்றம் செய்ய அவர்கள் உறுதியளித்தனர். இதற்கு ரூ.20 லட்சம் வரை செலவாகும் எனவும் தெரிவித்தனர். எனவே, வீட்டை இடிக்காமல் இடமாற்றுவது என முடிவு செய்து, 300 ஜாக்கிகள் மூலம் சுமார் 1.5 அடிக்கு வீட்டை உயர்த்தி அஸ்திவாரத்தைத் துண்டித்து செங்கல் வைக்கப்பட்டது. பின்னர் 300 ரோலர்கள் பொருத்தப்பட்டு, ஒரு நாளைக்கு 3 முதல் 4 அடி வரை வீட்டை பின்னோக்கி நகர்த்தி வந்தனர். இந்த வீட்டின் கழிவுநீர் தொட்டி இணைப்பு மட்டும் துண்டிக்கப்பட்டுள்ளது. குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட இணைப்புகள் துண்டிக்கப்படவில்லை. ஜன்னல், கதவு போன்றவையும் அகற்றப்படவில்லை. தற்போது 15 பணியாளர்கள் உதவியுடன் 35 அடி தூரத்திற்கு வீடு நகர்த்தப்பட்டுள்ளது” என்றார். டி.டி.பி.டி.நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுஷில் ஷிசோடியா கூறும்பொழுது, “வீட்டின் சுவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் 35 அடி தூரத்திற்கு நகர்த்தியுள்ளோம். இம்மாத (மே) இறுதிக்குள் 50 அடி தூரத்திற்கு நகர்த்தி, புதிதாக கட்டப்பட்டுள்ள அஸ்திவாரத்தில் வீடு நிலைநிறுத்தப்படும்” என்று தெரிவித்தார். இனிமேல் விரும்பிய வீட்டை விருப்பமான இடத்திற்கு இடம் பெயர்க்கலாம் போலும்!

மலை உச்சியில் கண்ணாடி பால்கனி! ஜூன்-2013


நான்கு மாடி கட்டிடத்தின் பால்கனியில் நின்று கொண்டு சாலையை வேடிக்கை பார்ப்பதெனில் நமக்கு கொள்ளை பிரியம். ஆனால், அதுவே 4000 அடி உயரத்தில் உள்ள மலை உச்சியில் பால்கனி அமைத்து, பள்ளத்தாக்கை வேடிக்கை பார்ப்பதென்றால் யாருக்குத்தான் பிடிக்காது? இந்த புதுமையான ஐடியாவை செயல்படுத்தி வெற்றி கண்டிருக்கிறது அமெரிக்காவின் அரிசோனா மாகாண அரசு. இங்குள்ள கிராண்ட் கேன்யான் என்கிற கிராமம் மலைப் பள்ளத்தாக்குகளைக் காண விரும்பும் சுற்றுலா பயணிகள் அடிக்கடி வந்துபோகும் இடமாகும். இங்குள்ள சுற்றுலா வளத்தை இன்னும் ஒரு படி உயர்த்த கிராண்ட் கேன்யான் நகராட்சி திட்ட மிட்டது. அதன்படி, எஸ்.என்.என். என்கிற ஆர்க்கிடெக்ட் அமைப்புடன் ஆலோசித்து, இப்படி ஒரு புது வடிவ கண்ணாடியால் ஆன பால்கனியை அமைத்து மவுண்டெய்ன் ஸ்கை வாக் என பெயரிட்டிருக்கிறது. ஒரே சமயத்தில் 120 மக்கள் வரை பார்வையிடக்கூடிய இந்த ஸ்கை வாக்கின் முழு நீளம் 175 அடியாகும். ஆனால், 70 அடி மட்டுமே மலையிலிருந்து வெளியே நீட்டியிருக்கும். மீதி 105 அடி நீளம் மலை உச்சியிலேயே நன்கு பொருத்தப்பட்டிருக்கிறது. அதாவது, ஒரு மடங்கு வெளியேயும், ஒன்றரை மடங்கு உள்ளேயும் பொருத்தப்பட்டிருப்பதால் பாதுகாப்புக்கு 100 சதவீத கியாரண்டி உண்டு. அதுவும் எப்படி பொருத்தப்பட்டிருக்கிறது என்றால், கொண்டை ஊசி வடிவம் கொண்ட இந்த ஸ்கை வாக்கின் இரு முனைகளும் 46 அடி நீளமுடைய 94 போல்ட்டுகளைக் கொண்டு நன்றாக முடுக்கப்பட்டிருப்பதுடன், அதன் மீது கட்டுமானங்களும் எழுப்பப்பட்டிருக்கிறது. பால்கனியின் அகலம் 10 அடியாகவும், அதன் ஒட்டுமொத்த சுற்றளவு 150 அடியாகவும், பால்கனியின் கண்ணாடி தடுப்பு 5 அடியாகவும் உள்ளது. பால்கனி தரைப்பகுதி கண்ணாடியால் அமைந்திருந்தாலும், இரு புறமும் இரும்புத் தகடுகளால் ஆன தடுப்புகளும் உண்டு. 100 மைல் வேகத்தில் காற்று முகத்தில் அறையும் அனுபவத்தை பெறுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிகிறார்கள். தலைக்கு 25 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த ஸ்கை வாக் அமைப்பதற்கு 30 பில்லியன் டாலர் செலவானதாக கூறப்படுகிறது. நம்மூர் மலை உச்சிகளிலும், நீர் வீழ்ச்சிகளிலும் இது போன்ற கண்ணாடி பால்கனிகள் பொருத்தப்பட்டால் அவை வரவேற்புக்குரியதே.

கட்டுமான வேலைகளை இணையம் மூலம் கண்காணிக்க! ஜூன்-2013


கட்டுமான வேலைகள் ஒரே இடத்தில் நடக்கும் என்று சொல்வதற்கில்லை. வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு இயந்திரங்கள், ஆட்களை வைத்து வெவ்வேறு நேரங்களில் வேலைகளைத் தொடர வேண்டும். இவை எல்லாவற்றையும் எளிதில் செய்து முடிக்க உதவுகிறது பில்டிங் பிளாக் என்ற தொகுப்பு. இதைப் பயன்படுத்திக் கட்டுமான வேலைகளை இணையம் வழியாகவே கண்காணிக்கலாம். இதில் கட்டடச் சொந்தக்காரர்களைப் பங்கேற்க வைக்கலாம். கட்டடக் கலை வல்லுநர்கள், பொறியாளர்களை ஒருங்கிணைக்கலாம். மேலாளர்களை நிர்வகிக்கலாம். ஒப்பந் தக்காரர்களைக் கவனிக்கலாம். கட்டுமான வேலையின் ஒவ்வொரு கட்டப் பணியையும் ஆய்வுசெய்யவும், அறிக்கை அளிக்கவும் இணை யத்தைப் பயன் படுத்திக்கொள்ளலாம். களத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றிய விவரங்களை உடனுக்குடன் இணையத்தில் அளிக்கலாம். செய்ய வேண்டிய வேலையில் ஏதாவது மாற்றங்களைப் புகுத்த வேண்டுமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். ஏதாவது சந்தேகங்களைக் கேட்பதாக இருந்தாலும் கேட்கலாம். வேலை அடைந்து வரும் முன்னேற்றம் அல்லது தடைகள் போன்றவற்றையும் அறிவிக்கலாம். அறிந்து கொள்ளலாம்.வரைபடங்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.அவற்றில் திருத்தங்களைச் செய்வதாக இருந்தாலும் செய்யலாம். வேலை நடக்காத நேரங்களிலும் திருத்தங்களை உட்படுத்தி, வேண்டிய நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம். வேலை செய்பவர்கள் நடந்து கொண்டே பயன்படுத்தி வந்த வாக்கி ‡ டாக்கிக்கெல்லாம் இப்போது அவசியமே இல்லாமல் செய்துவிட்டது வாய்ஸ் மெயில் வசதி.கற்றை கற்றையாகக் காகிதங்களைக் கையாள வேண்டிய தேவையும் கிடையாது. அவ்வளவு ஏன்? எந்தவொரு நிர்வாக முடிவையும் சட்டென்று எடுப்பதற்குத் தேவைப்படும் அத்தனை விவரங்களும் விரல் நுனியில் இருக்குமாறு செய்து கொள்ளலாம். இந்த பில்டிங் பிளாக் மென்பொருளை பயன்படுத்த வேண்டுமெனில், நீங்கள் கார்பொரேட் நிறுவன மாகவோ அல்லது பத்துக்கும் மேற்பட்ட புரஜெக்டுகளை செய்கிற நிறுவனமா கவோத்தான் இருக்க வேண்டும் என்கிற யாதொரு அவசியமும் இல்லை. நீங்கள் ஜி+1 புராஜெக்டில் 4 வீடுகளை மட்டுமே கட்டுகிற கட்டுநராக இருந்தால் கூட உங்களுக்கு இந்த மென் பொருள் பெரிதும் பயன்படும்.இந்த மென்பொருளின் மாதிரியை உங்கள் கணினியில் நிறுவி டிரெயல் பார்க்கலாம். www.digitalcanal.com/buildingblocks.htm என்கிற இணையதள முகவரியில் இதனை பதிவிறக்கம் செய்து பாருங்கள்.

சிவிலுக்கு மட்டுமே இத்தனை சிறப்பு! ஜூன்-2013


நாலு பேரிடம் பெருமையாக சொல்ல வேண்டுமே, நாலு பேர் நம்மை மதிக்க வேண்டுமே என வெற்று பந்தாவிற்கு ஆசைப்பட வில்லையெனில், ப்ளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு மிக நல்ல தேர்வு சிவில் இன்ஜினியரிங் ஆகும். நம்முடைய வாழ்வுடன் நெருங்கிய தொழில் சிவில் தவிர வேறு எதுவும் இல்லை. இந்தியாவில், தென்கிழக்கு ஆசிய நாடுகளில், ஆப்ரிக்காவில், வளைகுடா நாடுகளில், மத்திய கிழக்கு அரபு நாடுகளில், அடுத்த பத்து வருடங்களுக்கு உயர்தர வேலை வாய்ப்புகளை அள்ளி வழங்கும் வருமானம் உள்ள பிரிவுதான் Civil Engineering..சிவில் என்றாலே வெயில், அழுக்கு, தூசிதானே என யோசிக்கும் உங்களுக்கு சிவிலின் சிறப்புகளை தொகுத்து சொல்வதுதான் இக்கட்டுரை. சிவில் இன்ஜினியர் என்றால் வீடு கட்டுபவர், அல்லது கட்டுமானம் போன்ற துறைகளில் வேலை செய்பவர் என்ற ஒருதலைப்பட்சக் கணிப்பு உள்ளது. இது தவறு. சிவில் இன்ஜினியர் பல வேலைகளைப் பார்க்க முடியும். என்ன மாதிரி? கட்டிடம் அமைக்கவுள்ள தேவைகளை, பொருட்களை நிர்ணயம் செய்யும் அளவாளர் (Quantity Surveyor), நிலம் அளவு நிர்மாணிப்பவர் (Land Surveyor) கட்டிடம், இடம் வடிவம் செய்பவர் (Design Engineer), இடப் பொறியாளர் (Site Engineer), திட்ட மேலாளர் (Project Manager),பாலம் கட்டும் பொறியாளர் (Bridges Engineer), சாலைப் பொறியாளர் (Road Engineer), போக்குவரத்துப் பொறியாளர் (Transport Engineer), கடல்வாழ் கட்டிடம் அமைப்பவர் (Marine Construction), பூகோள நுணுக்க பொறியாளர் (Geo Technical Engineer), கடலைத்தூற்றி நிலமாக்கும் பொறியாளர் (Reclamation Engineer),ஒப்பந்த மேலாளர் (Contract Manager), வாணிப மேலாளர் (Commercial Manager), உற்பத்தியாளர் (Producer), ஒப்பந்தக்காரர் (Contractor), யோசனை டிராயிங், கட்டிட சூபர்விக்ஷன் செய்பவர் (Consultant), இப்படிச் சொல்லில் அடங்காத எண்ணற்ற சேவைகளைப் புரியலாம். “Quantity Surveyor” படிப்பு பற்றி பார்க்கலாம். தகுதி B.E. Civil Engineering or DCE (Diploma in Civil with 3 years experience). . துபாய் போன்ற வளைகுடா நாடுகளில் இவர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.2 லட்சம், அதிகபட்சம் ரூ.4 லட்சம் ஒரு மாதத்திற்கு. QS/QC என அழைக்கப்படும் பொறியாளர்களுக்கு என்ன வேலை? திட்டம் சம்பந்தப்பட்ட வடிவங்களைப் படித்து சரி செய்தல் (Review), கட்டிடம், திட்டம் சம்பந்தப்பட்ட புனரமைப்பு வேலைகளைப் படித்தல். கட்டமைப்பு வசதிகளை படித்து, அது சம்பந்தப்பட்ட சாலைகள், தெருக்கள், கழிவுநீர் வசதி, குடிநீர்வசதி, Gas Connection, போன்றவற்றை ஆய்ந்து, ஒப்பந்தக்காரர்களின் விலை தயாரித்தல், மனித வளம், பொருட்களின் விலைகளை ஒப்பிட்டு திட்டம் தயாரிப்பது, செய்யத்தக்க செயல்முறைகளைக் கையாளும் விதம் (Feasibility Studies) தயாரிப்பது, ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட கோப்புகளையும், பத்திரங்களையும் பார்த்தல், வேலைக்குப் பேசப்பட்ட ஒப்பந்தத் தொகைகளை, வேலைகளுக்கு ஏற்ப, வேலைகளை முடித்ததிற்கு ஏற்றவாறு பணம் செட்டில் செய்தல், பட்ஜெட் விபரங்களைத் தயாரித்தல், ஒப்பந்தக்காரர்களின் முடிவான கணக்குகளை செட்டில் செய்தல், மதிப்பீடு செய்து, ஒப்புக் கொள்ளப்பட்ட வேலையின் விலையில் மாற்றங்கள் இருந்தால், அதற்கான வழி முறைகளை ஆராய்ந்து சிபாரிசு செய்தல், வேலை நடக்கும் இடங்ளுக்கு (Field Visit) சென்று திட்டங்களையும், அதன் முன்னேற்றங்களையும், மற்றபடி, , Mechanical/Electrical வேலைகளின் பிற சேவைகளைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட கோப்புகளைத் தயாரித்து யோசனை வழங்குதல். மேற்சொன்ன வேலைகளுக்கான தகுதிகள்: B.E. Civil/Diploma Civil, நாட்டில் உள்ள கட்டிட வேலைகளின் விபரம், பொருட்களின் தரம், விலை, சந்தையில் உள்ள மாற்றங்கள், ஒப்பந்தக்காரர்களின் விபரங்கள் தகுதிகளை அறிதல், மனிதவளம் செலவுகளைக் கணக்கிடுதல் வேண்டும். மற்ற நாடுகளான இலங்கை, ஆஸ்திரேலியா, கனடா பல்கலைக்கழகங்களில் Bachelor Degree in Quantity Survey சொல்லித் தருகிறார்கள். B.E. Civilபடித்து, இதே வேலையை எடுத்துக் கொள்ளலாம்.Indian Quantity Surveyors Association (IQSA) என்ற அமைப்பில் மாணவர்கள் தொடர்பு கொண்டு வேலைவாய்ப்புகளை, படிப்புகளைத் தெரிந்து கொள்ளலாம்.WEBSITE-_ (IQSA) சென்று பார்த்தால் விபரங்கள் மேலும் அறியலாம். வெளிநாடுகளில் நல்ல சம்பளம் கிடைக்கிறது. ஆதலால் இத்தகைய பணிபுரியும் பொறியாளர்கள், ஒப்பந்தக்காரர் களிடமிருந்து “கையூட்டு” பெற மாட்டார்கள். இயல்பாக இந்தத் தொழிலுக்கு நுழைபவர்களிடம் நேர்மையும், உண்மையும் இருக்க வேண்டும். (Integrity) B.E. Civil/Diploma Civil பயிலும் மாணவர்கள் செய்ய வேண்டியது: QS சம்பந்ததப்பட்ட விபரங்களை கணினி வெப் மூலம் தெரிந்து கொள்ளவும். Charted Institute of Building (CIOB), Royal Institution of Charted Surveyors (RICS), National Institute of Construction Management and Research (NICMAR) போன்ற அமைப்புகளின் செயல்பாடுகளைத் தீவிரமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நேரம் கிடைக்கும் பொழுது, நண்பர்கள் மூலம் கட்டிட வேலைகள் நடக்கும் இடத்திற்குச் சென்று பார்வையிடலாம். கொத்தனார், தச்சர், ஃபிட்டர் போன்றவர்களிடம் அடிக்கடி உரையாடி, அனுபவரீதியான தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். பாலிடெக்னிக்குகள், பொறியியல் கல்லூரிகள் கட்டாய மாக ஃபீல்டு விசிட் ஏற்படுத்த வேண்டும். கட்டிட நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு பயிற்சிகளை அளிக்க வேண்டும். Building Materials, கட்டிடப் பொருட்கள், இயந்திரங்கள், இதில் உள்ள நவீன வளர்ச்சி பற்றி சந்தைக்குச் சென்று மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். சிவில் இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன். ஆனால், என் வீட்டில் பிளஸ் 2 விற்குப் பின் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிக்கக் கூறுகின்றனர். சிவில் இன்ஜினியரிங் நல்ல வேலை வாய்ப்பு தரக்கூடிய படிப்புதானா? என்பதுதான் பெரும்பாலான ப்ளஸ் 2 மாணவர்களின் கேள்வியாக இருக்கிறது. அவர்களுக்கெல்லாம் இதுதான் பதில்: ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்த நாட்டிலுள்ள உள்கட்டமைப்பு வசதிகளான சாலைகள், பாலங்கள், சுரங்கப்பாதைகள், ரயில்வே, விமானப் போக்குவரத்து வசதிகள், கடல்வழிப் போக்குவரத்து அமைப்புகள், சாக்கடை வசதிகள், குடிநீர் வசதிகள், கட்டிடங்கள் போன்றவற்றைப் பொறுத்தே அமைகிறது. இவற்றையெல்லாம் வடிவமைப்பவர்கள் சிவில் இன்ஜினியர்கள்தான். எனவே, ஒரு சிவில் இன்ஜினியராக மாறினால் சிமெண்டினாலும், செங்கலினாலும் கவிதை போன்ற வடிவங்களை உருவாக்கும் வித்தை புரிகிறது. இதனால் காலாகாலத்திற்கும் மக்கள் நம்மை ஞாபகத்தில் வைத்துப் போற்றக்கூடிய சான்றுகளை நமது சந்ததியினருக்கு விட்டுச் செல்லும் வாய்ப்பும் எழுகிறது. இத்துறையில் உள்ள சிறப்புப் படிப்புகள் இவைதான். கன்ஸ்ட்ரக்க்ஷன் இன்ஜினியரிங்: குறிப்பிட்ட வடிவங்களை உருவாக்குவதே இத்துறையின் அடிப்படை அம்சமாகும். ஒரு கன்ஸ்ட்ரக்க்ஷன் இன்ஜினியர் திட்டமிடுதலில் தொடங்கி, வடிவமைத்தல், பட்ஜெட் கன்ட்ரோல், குவாலிடி கன்ட்ரோல், மெட்டீரியல் டெஸ்டிங் என்பதிலிருந்து மேற்பார்வை செய்வது போன்ற அன்றாட கட்டுமானப் பணி தொடர்புடைய வேலைகளை மேற்கொள்ள வேண்டும். ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங்: கட்டுமானத்தில் உபயோகிக்கப்படும் பல்வேறு பொருட்களின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்புகள் குறித்த படிப்பாகும் இது. அழுத்தத்தைத் தாங்கும் உறுதித் தன்மை பற்றி கட்டுமான உபயோகப் பொருட்கள் பரிசோதிக்கப்பட வேண்டும். அது போலவே அணைகள், சாலைகள், எண்ணெய் கிணறுகள், பாலங்களில் வேறு வித மான கட்டுமானப் பொருட்கள் உபயோகப்படுத்தப்பட வேண்டியிருப்பதால் ஒவ்வொரு கட்டுமானப் பணிக்கும் எப்படிப்பட்ட பொருட்களை உபயோகிக்க வேண்டும் என்பதை இவர்களே முடிவு செய்கிறார்கள். நகர்ப்புற திட்டமிடல்: இது அர்பன் பிளானிங் அல்லது சிட்டி பிளானிங் என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள சண்டிகர், புனே போன்ற நகரங்கள் மிகவும் திட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்ட நகரங்களாகும். அதாவது, இங்கு வசிக்கும் மக்கள் சீரிய சாலைகள், பாலங்கள், வீட்டு வசதிகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், குடிநீர் வசதி, சாக்கடை வசதி, தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு வசதி போன்ற வசதிகளைப் பெறுவதற்கு உதவுவது இந்தத் துறைதான். நகர்ப்புற திட்டமிடல் படிப்புகளின் நோக்கம் என்பது நவீன, வசதியான, பாதுகாப்பான உள் கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட நகர் அல்லது ஊரை வடிவமைப்பதாகும். ஜியோமெக்கானிக்கல் இன்ஜினியரிங்: எந்தவொரு கட்டிடமாக இருந்தாலும் சரி, அதன் அடித்தளம் என்பது அது அமைந்துள்ள பூமியின் பரப்பைச் சார்ந்துள்ளது. எனவே, மண்ணின் தன்மையே எந்தக் கட்டிடத்திற்கும் ஆதாரமாக உள்ளது. இவற்றைப் பற்றிப் படிப்பதுதான் ஜியோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங். இதைப் படிப்பவர்களில் பெரும்பாலானோர் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் தாதுக்களை கண்டறியும் தொழிற்சாலைகளில் பணியில் இருக்கிறார்கள். தண்ணீர் மற்றும் மரேன் இன்ஜினியரிங்: தண்ணீர் தொடர்புடைய வேலைகளுக்காக நகரங்களில் கட்டப்படும் மாதிரிகளிலும், விவசாயம், கால்வாய்கள், அணைகள், வேஸ்ட் வாட்டர் டிரீட்மெண்ட் ஆலைகள், துறைமுகம், எண்ணெய் கிணறுகள், ஹைட்ரோ எலெக்ட்ரிக் மின்சார வசதிகள் தொடர்புடைய படிப்புகள் இந்தப் பிரிவைச் சேர்ந்தவையே. என்றும் எப்போதும் தேவைப்படும் திறனாளர்களை உருவாக்கும் சிவில் இன்ஜினியரிங் துறையை மாணவர்கள் தேர்வு செய்து வாழ்வில் வெற்றி பெறுவதோடு, நாட்டின் முன்னேற்றத்திலும் பங்கு கொள்ளலாம்.